மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் குடியரசு தினக் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் மகாரஷ்டிராவின் நீர்வளத்துறை அமைச்சரும், பா.ஜ.க தலைவருமான கிரீஷ் மகாஜன் உரையாற்றினார். அந்த உரையில், குடியரசுத் தினத்துக்கு தொடர்பில்லாதவர்களின் பெயரையெல்லாம் குறிப்பிட்டு பேசியவர், டாக்டர் அம்பேத்கர் பெயரைமட்டும் குறிப்பிடவில்லை. அவரின் உரை முடிவை எட்டும்போது, அந்த சபையில் இருந்த வனத்துறை ஊழியர் மாதவி ஜாதவ், அப்போதே ஆட்சேபனை தெரிவித்தார்.
அதனால் அந்த இடம் சலசலப்பானது. அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கிரீஷ் மகாஜன், “அம்பேத்கர் பெயரை உரையில் குறிப்பிடாமல் இருந்தது தற்செயலானது. எந்த திட்டமும் இல்லை. என் செயல் புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்” என விளக்கமளித்திருந்தார்.

இது குறித்து வனத்துறை ஊழியர் மாதவி ஜாதவ், “பி.ஆர்.அம்பேத்கர் பற்றிய குறிப்பைத் தவிர்த்தது தற்செயலானது என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அமைச்சர் சத்ரபதி சிவாஜி மகாராஜ், சம்பாஜி மகாராஜ் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்ட அவர், அரசியலமைப்பின் தந்தையைப் பற்றிய குறிப்பை வசதியாகத் தவிர்த்திருக்கிறார். இந்த வழக்கில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பொருந்தாது என்பது கிரீஷ் மகாஜனின் அதிர்ஷ்டம். அது என் துரதிர்ஷ்டம். கிரீஷ் மகாஜன் பாபாசாகேப் அம்பேத்கரின் அனைத்துப் பின்பற்றுபவர்களிடமும் எழுத்துப்பூர்வமாக மன்னிப்புக் கோர வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.