“சி.பி.ஐ தனக்கு சம்மன் அனுப்பி உள்ளது ஆச்சரியமாக உள்ளது!” – செந்தில் பாலாஜி காட்டம் – senthil balaji interview!

Spread the love

கரூரில் செய்தியாளர்களை சந்தித்த, தி.மு.க கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி,

“கரூரில் ரூ. 38.50 கோடி மதிப்பீட்டில், ஐந்து தளங்களுடன் 64,000 சதுர அடி பரப்பளவில், நான்கு தளங்களுடன் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு தமிழக முதலமைச்சர் அடிக்கல் நாட்டியுள்ளார். ஓராண்டுக்குள் பணிகள் நிறைவுற்று மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இதனால், உள்ளூர் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்.

சி.பி.ஐ சம்மன் வழங்கியிருப்பது குறித்து கேட்க்கிறீர்கள். டெல்லி சி.பி.ஐ அலுவலகத்தில் மார்ச் 17-ம் தேதி கரூர் துயர சம்பவம் தொடர்பாக ஆஜராக இமெயில் மூலம் எனக்கு சி.பி.ஐ சம்மன் வழங்கி உள்ளது. நேரில் ஆஜராகி உரிய பதில்களை அளிப்பேன். சி.பி.ஐ என்ன கேள்விகள் என்னிடம் கேட்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். எனக்கு எந்த அடிப்படையில் சி.பி.ஐ சம்மன் வழங்கி உள்ளது என்பது தெரியவில்லை. கூட்டத்திற்கான அனுமதியை கேட்டது நிகழ்ச்சி நடத்திய கட்சி. அதற்கு அனுமதி வழங்கியது காவல்துறையும், கரூர் மாவட்ட நிர்வாகமும் தான். ஆனால், எனக்கு சி.பி.ஐ சம்மன் வழங்கியதை, ஆச்சரியம் அளிக்கக் கூடிய விஷயமாகத்தான் நான் பார்க்கின்றேன். இரண்டு தினங்களுக்கு முன்பு அ.தி.மு.க கரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், நிகழ்ச்சி ஒன்றில் பேசும் பொழுது, “41 பேர் கரூர் துயர சம்பவத்தில் பலியானார்கள். செந்தில் பாலாஜிக்கு சி.பி.ஐ சம்மன் வழங்கி உள்ளது’ என்று பேசியுள்ளார். எனக்கு சி.பி.ஐ சம்மன் வழங்கினால் விஜயபாஸ்கருக்கு என்ன கஷ்டம் என்று தெரியவில்லை. பாதிக்கப்பட்ட மக்களை மருத்துவமனையில் சென்று நானும் பார்த்தேன். அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் கூட நேரில் பார்த்து ஆறுதல் தெரிவித்தார்கள். நான் திருப்பி கேட்கின்றேன், எல்லோருக்கும் சி.பி.ஐ சம்மன் வழங்குமா?. சி.பி.ஐ விசாரணை முறையாக நடக்கிறது என்றால், மருத்துவமனைக்கு ஆறுதலை தெரிவிக்க சென்ற அனைவருக்கும் சி.பி.ஐ சம்மன் வழங்கி இருக்க வேண்டும். அதற்குள் நான் அதிகமாக உள்ளே செல்ல விரும்பவில்லை. 17-ம் தேதி சி.பி.ஐ விசாரணை முடியட்டும். அதன் பின்னர் பார்க்கலாம்.

கடந்த 2021 -ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னம் போட்டியிட தமிழக முதலமைச்சர் வாய்ப்பு வழங்கினார். நான்கு தொகுதிகளிலும் உதயசூரியன் வென்றது. எதிர்வரும் சட்டமன்ற பொது தேர்தலிலும் கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னம் வெற்றி பெற தி.மு.க-வினர் கடுமையாக உழைப்போம். தி.மு.க சார்பில் கரூர் மாவட்டம் முழுவதும் பரிசு பொருட்கள் விநியோகம் செய்வதை போல அ.தி.மு.க சார்பிலும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பரிசுப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்திருப்பது குறித்து கேட்கிறீர்கள். கடந்த, 1996 -ல் கவுன்சிலர் பதவி முதல் 2006 – ம் வருட சட்டமன்ற உறுப்பினர் என துவங்கி இன்று வரை மக்களுக்காக தான் தொகுதியில் பணியாற்றி வருகின்றேன். தமிழக முதலமைச்சர் துணை முதலமைச்சர் பிறந்தநாள் விழாவை ஒட்டி, கரூர் மாவட்டம் முழுவதும் 3,30,000 குடும்பங்களுக்கு மாவட்ட தி.மு.க சார்பில் பரிசுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வினை துவக்கி வைத்து நிறைவடையும் நிலையில் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் பரிசுப் பொருட்கள் மாவட்டம் முழுவதும் தி.மு.க சார்பில் வழங்கப்படுகிறது. ஆனால், அ.தி.மு.க-வினர் தேர்தலை மனதில் வைத்து கரூர் சட்டமன்ற தொகுதியில் மட்டும் அதுவும், தான்தோன்றிமலை தேர் கடை வீதியில் விற்கும் பொருட்களை தொகுதி மக்களுக்கு பரிசு பொருள் எனக் கூறி வழங்கி வருகின்றனர்.

நான் இதை நகைச்சுவைக்காக கூறவில்லை. தேர்தலை மனதில் வைத்து மக்களை சந்திக்கக்கூடிய இயக்கம் தி.மு.க அல்ல. எனது அரசியல் வாழ்வில் பத்தாண்டுகள் கவுன்சிலர் பதவி, 20 ஆண்டுகள் எம்.எல்.ஏ பதவி என 30 வருடங்கள் அரசியல் அனுபவம் கொண்ட நான் என்றைக்கும் தனிப்பட்ட ஒரு நபரை தரக்குறைவாக பொதுவெளியில் விமர்சித்து பேசியது கிடையாது. மக்கள் பிரதிநிதியாக இருந்து கரூர் மாவட்டத்திற்கு என்ன திட்டங்களை கொண்டு வந்தோம். அடுத்து, என்ன திட்டங்களை கொண்டு வர உள்ளோம் என்பதை கூறி எதிர்வரும் சட்டமன்ற பொது தேர்தலை சந்திக்க உள்ளோம். அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மணல் திருட்டை தடுப்பதாக கூறி போராடச் சென்றவர் தனது வீட்டைச் சுற்றி திருட்டு மணலை குவித்து வைத்திருந்தது தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது சுவர் விளம்பரம் எழுத சென்றதற்காக நாள் முழுவதும் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டேன். சட்டம் அனைவருக்கும் பொதுவானது. எனவே தான் காவல்துறை திருட்டு மணல் வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்துள்ளது. தனிப்பட்ட முறையில் சொத்து சேர்க்க வேண்டும் என்று அரசியலில் நான் ஈடுபடவில்லை. நான் சொத்து சேர்க்க வேண்டும் என என்றும் பொதுவாழ்வில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்கப் போவதில்லை. ஆனால், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், சொத்து குவிப்பு வழக்கில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்காக தமிழக ஆளுநர் ஒப்புதல் பெற கோப்பு நிலுவையில் உள்ளது. ஒப்புதல் அளித்து இருந்தால் நீதிமன்றத்தில் விசாரணை துவங்கி இருக்கும். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் தூயவன் போல பொதுவெளியில் பேசி வருகிறார்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *