இது குறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க சீனியர்கள், “நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள், அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்து, வெற்றிக்கான வியூகங்களை வகுப்பார்கள். அதிலும் பா.ஜ.க போட்டியிட வாய்ப்புள்ள தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தவும் அறிவுறுத்தப்படுவார்கள். அண்ணாமலைக்கு வழங்கப்பட்ட தொகுதிகளில் காரைக்குடியில் உறுதியாக பா.ஜ.க களமிறங்குவதால் அவர் அங்கே கூடுதல் கவனம் செலுத்த வாய்ப்புள்ளது. சோஷியல் இன்ஜினீயரிங் வியூகங்களை மேற்கொள்ளவும் ஆயத்தமாகிறது பா.ஜ.க. காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுவதாலும் காங்கிரஸும் வலுவாக இருப்பதால், வாக்குகள் தாறுமாறாகப் பிரியும். அதை பயன்படுத்தி வெற்றிபெறுவதற்கு பா.ஜ.க இலக்கு நிர்ணயித்துள்ளது” என்றனர்.
அரசியல் பார்வையாளர்கள் சிலரோ, “நா.த.க-வையும் சீமானையும் பொதுவெளியில் அண்ணாமலை பாராட்டினாலும், இளைஞர்கள் சீமான் பின்னால் திரள்வதை பா.ஜ.க விரும்பவில்லை. எனவே சீமான் வென்றுவிடக் கூடாது என்பதில் உறுதிகாட்டுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. எனவே நா.த.க முகாமில் அதிர்ச்சி பற்றிக் கொண்டிருக்கிறது” என்றனர்.