சென்னை: தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளிலும் சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
நம் நாட்டின் சுதந்திர தின விழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, அனைத்து விதமான பள்ளிகளிலும் சிறந்த முறையில் சுதந்திர தின விழாவை மகிழ்ச்சியும், எழுச்சியும் மிக்க நிகழ்ச்சியாக கொண்டாட வேண்டும். பள்ளி வளாகத்தை வண்ண காகிதங்கள், மலர்களால் அலங்காரம் செய்து தேசியக்கொடி ஏற்றி விழாவை நடத்த வேண்டும்.
இதுதவிர, ஊராட்சி மன்ற நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், புரவலர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் ஆகியோரை அழைத்து விழாவில் பங்கு பெறச் செய்ய வேண்டும். பிளாஸ்டிக் வகை தேசியக் கொடிகளை பயன்படுத்தக் கூடாது. அதே போல், தேசியக் கொடியை தலைகீழாக அல்லது கிழிந்த கொடிகளை ஏற்றக் கூடாது. என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.