வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
கிட்டத்தட்ட உலக அளவில் போலியோ ஒழிக்கப்பட்ட நிலையில் 70 ஆண்டுகளுக்கு முன்பு மனிதகுலத்தைக் காக்க போலியோவிற்கு மருந்து கண்டுபிடித்த ஜோனாஸ் சால்கை உலகம் மறந்துவிட்டது என்றே கூறலாம். தான் கண்டறிந்த போலியோ தடுப்பூசிக்கு காப்புரிமை வேண்டாம் என ஜோனாஸ் சால்க் மறுத்ததால் மட்டுமே உலக அளவில் போலியோவிற்கு எதிரான நோய்த் தடுப்பு சாத்தியமானது.
கண்ணுக்குத் தெரியாத போலியோ தீநுண்மி சிறு குழந்தைகளை ஊன்றுகோல்களுடன் வலம் வரச் செய்தது. முடமாக்கி சக்கர நாற்காலிகளில் அமரச் செய்தது. இரும்பு நுரையீரல் என்று அழைக்கப்பட்ட காற்றோட்டி (வென்டிலேட்டர்) இயந்திரம் மூலம் சுவாசிக்க செய்தது.
அச்சம் காரணமாக ஒவ்வொரு கோடைக்காலத்திலும் பொது நீச்சல் குளங்களும் திரையரங்குகளும் மூடப்பட்டன.
தங்கள் குழந்தை அடுத்த பலியாகிவிடுமோ என்ற பயத்தில் பெற்றோர்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்களை கூட ரத்து செய்தனர். தடுப்பூசிகள் வருவதற்கு முன்பு போலியோ ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான குழந்தைகளை முடமாக்கி கொன்றது, அச்சத்தைப் பரப்பியது.
போலியோவால் பாதிக்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி ஃபிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் மற்றும் அவரது வழக்கறிஞர் பேசில் ஓ”கானர் ஆகியோரால் நிறுவப்பட்ட லாப நோக்கற்ற தேசிய இளம்பிள்ளை வாத அறக்கட்டளைக்கு நிதி வழங்க அமெரிக்கர்கள் வெள்ளை மாளிகைக்கு தலா 10 சென்ட் நாணயங்களை அனுப்பி வைக்க பணிக்கப்பட்டனர்.
லூசில் பால் முதல் எல்விஸ் வரையிலான பிரபலங்கள் இந்த “மார்ச் ஆஃப் டைம்ஸ்” (10 சென்ட் நாணயங்களின் அணிவகுப்பு) திட்டத்தை ஊக்குவிக்க கேட்டுக்கொள்ளப்பட்டனர், குழந்தைகளைப் பெற்ற இந்த கொடிய நோயை வெல்வதற்காக நிதி திரட்ட வீடு வீடாகச் சென்றனர்.