தமிழக அரசியல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. வலுவாக இருந்த திமுக கூட்டணியில் காங்கிரஸ் போக்கு காட்டிக்கொண்டிருக்க, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் டிடிவி தினகரன் இணைந்திருப்பது அந்த கூட்டணிக்கு வலிமை சேர்த்திருக்கிறது.
இத்தனை நாட்கள் கூட்டணி கணக்குடன், ஒருவரை ஒருவர் விமர்சிக்காமல் அமைதிகாத்து வந்த அதிமுகவும் தவெகவும் வார்த்தைப் போரில் இறங்கியுள்ளது. இந்த பரபரப்பான சூழலில், அதிமுகவைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்…
“தேர்தல் பணிகள் எப்படி செல்கிறது, கள நிலவரம் எப்படி உள்ளது?”‘
“தேர்தல் பணிகள் பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது. மக்கள் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியைத்தான் விரும்புகிறார்கள் என்பது களத்தில் தெரிகிறது.”
“ஆரம்பத்தில் விஜய்யை ஆதரித்துப் பேசிய நீங்கள் இப்போது தவெக-வை கடுமையாக விமர்சித்து வருகிறீர்களே?”
“புதிதாகக் கட்சி தொடங்கியிருக்கிறார் என்ற அடிப்படையில், வரவேற்றோம். ஆளுங்கட்சியும், அரசும் அவரை எதிர்க்கும்போது, புதியவர்களும் வர வேண்டும் என்கிற அடிப்படையில் அவர்களுக்கு சப்போர்ட்டாக பேசியவர் எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடியார். நாங்கள் வரவேற்றோம் என்பதற்காக, அவர்கள் பேசுவது அனைத்தையும் அதிமுக தாங்கிக்கொண்டிருக்குமா? அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இருக்கிறது. அதனால்தான் விமர்சிக்கிறோம்.”