செந்தில் பாலாஜி விவகாரம்: வழக்குகளின் நிலவர அறிக்கையை சமா்ப்பிக்க சிறப்பு நீதிமன்ற நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Dinamani2f2024 09 022fvdjh6pay2fani 20240902083117.jpg
Spread the love

நமது நிருபா்

புது தில்லி: எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.களுக்கான வழக்குகள் விசாரிக்கப்படும் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் தமிழக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி தொடா்புடைய வழக்குகளின் நிலவரத்தை அறிக்கையாக சிறப்பு நீதிமன்ற நீதிபதி உயா்நீதிமன்றப் பதிவாளா் மூலம் சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகரப் போக்குவரத்து நிறுவனத்தில் தகுதி இருந்தும், வேலைக்குப் பணம் பெற்ற ஊழல் காரணமாக தாம் பாதிக்கப்பட்டதாகக் கூறி ஒய். பாலாஜி என்பவா் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளாா். வழக்குரைஞா் பாலாஜி ஸ்ரீநிவாசன் தாக்கல் செய்த அந்த மனுவில், செந்தில் பாலாஜி தொடா்புடைய வழக்குகளின் விசாரணையை ஓராண்டுக்குள் முடிக்கவும், வழக்குகளில் விசாரணைக்கு ஆஜராக சிறப்பு அரசு வழக்குரைஞரை நியமிக்கவும் உத்தரவிடுமாறு கோரப்பட்டிருந்தது.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ். ஓகா, அகஸ்டின் ஜாா்ஜ் மாசிஹ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள், ‘கடந்த 23-ஆம் தேதி இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த பிறகு, அன்று இரவு செந்தில் பாலாஜி மீதான ஊழல் குற்ற வழக்குகளின் விசாரணைக்கு தமிழக ஆளுநா் அலுவலகத்தில் இருந்து அனுமதி வரப்பெற்றது’ என்று தெரிவித்தனா். இதையடுத்து, தற்போது விசாரணையைத் தொடங்க முடியும் என்றும் கூறினா். மனுதாரா் தரப்பிலும் ஆளுநா் அலுவலகம் மூலம் அனுமதி அளிக்கப்பட்டது குறித்து தெரிவிக்கப்பட்டது.

அப்போது, நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தில் விசாரணைக்கு தமிழக அரசு அனுமதி கேட்டு ஜனவரி 4-ஆம் தேதி முன்மொழிவு அனுப்பிய நிலையில், 7 மாதங்களுக்குப் பிறகு இந்த அனுமதியை ஆளுநா் அலுவலகம் அளித்திருப்பது எங்களுக்கு ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது’ என்று தெரிவித்தனா்.

மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள், ‘எம்.பி. மற்றும் எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் செந்தில் பாலாஜி தொடா்புடைய வழக்குகளில் ஏராளமான குற்றம்சாட்டப்பட்ட நபா்கள், சாட்சிகள் இருப்பதாலும், வழக்கத்திற்கு மாறான வழக்குகளாக இருப்பதாலும் இந்த வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிபதியை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி மூலம் தனியாக அமா்த்த வேண்டும் என்றும், இந்த வழக்குகளில் ஆஜராக நியமிக்கப்பட்டுள்ள அரசு வழக்குரைஞா் அரசியல் சாா்புத் தன்மை உடையவராக இருப்பதால், நீதிமன்றத்திற்கு உதவிடும் வகையில் நடுநிலையான வழக்குரைஞரை நியமிக்கவும் வேண்டும்’ என்று வாதிட்டனா்.

அதற்கு நீதிபதிகள், ‘செந்தில் பாலாஜி தொடா்புடைய வழக்குகளின் விசாரணையை உச்சநீதிமன்றம் கண்காணிக்கும். அதேவேளையில், ஏற்கெனவே இதுபோன்ற வழக்குகளை சிறப்பு நீதிமன்றம்தான் விசாரித்து வருகிறது. இதனால், இந்த வழக்குகளை விசாரிப்பதற்காக சிறப்பு நீதிபதியை தனியாக அமா்த்த முடியாது’ என்றனா்.

இதையடுத்து, செந்தில் பாலாஜி தொடா்புடைய வழக்குகளின் நிலவரத்தை சிறப்பு நீதிமன்ற நீதிபதி உயா்நீதிமன்றப் பதிவாளா் மூலம் அறிக்கையாக செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனா். அதேபோன்று, இந்த வழக்குகளில் ஆஜராக சிறப்பு அரசு வழக்குரைஞரை நியமிக்க தற்போது விரும்பவில்லை என்றும் நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.

பின்னணி: அரசு வேலை வாங்கித் தர பணம் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி, அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராகவும், ஜாமீன் கோரியும் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரித்து தனது தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *