சென்னை: சென்னை மாவட்டத்தில் எஸ்ஐஆர் பணிகளை கண்காணிக்க 8 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாவட்டத்தில் 16 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இவற்றில் 40 லட்சத்து 4 ஆயிரத்து 694 வாக்காளர்கள் உள்ளனர். இத்தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி (SIR) கடந்த நவ.4-ம் தேதிமுதல் நடைபெற்று வருகிறது. 3,718 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வீடு வீடாக எஸ்ஐஆர் படிவம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்காக ஏற்கெனவே நவ.3-ம் தேதிவரை படிவங்களை அச்சிடும் பணிகள், அலுவலர்களுக்கு பயிற்சியளிக்கும் பணிகள் நடைபெற்றன. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டங்களும் நடத்தப்பட்டன.
2 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ஒரு மேற்பார்வையாளர் என 1,859 வாக்குச்சாவடி நிலை மேற்பார்வையாளர்கள் இப்பணிகளை கண்காணித்து வருகின்றனர். படிவங்களைப் பூர்த்தி செய்ய வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உதவுவார்கள். வீடுகள் பூட்டியிருந்தாலும், அலுவலர்கள் 3 முறை வந்து, படிவங்களைக் கொடுத்து, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை பெற்றுக்கொள்வார்கள்.
வாக்காளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட 2 கணக்கீட்டுப்படிவத்தில் ஒன்றை தாங்கள் வைத்துக் கொண்டு, மற்றொன்றை வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் வழங்க வேண்டும். அவ்வாறு பெறப்படும் படிவத்துக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலரால் ஒப்புதல் வழங்கப்படும்.
இந்த பணியானது டிச.4-ம் தேதி வரை நடைபெறும். இப்படிவங்கள் அனைத்தும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் இந்திய தேர்தல் ஆணைய ஸ்மார்ட்போன் செயலி மூலமாக பதிவேற்றம் செய்யப்படும்.
சென்னை மாவட்டத்தில் 16 தொகுதிகளுக்கும் கண்காணிப்பு அலுவலர்களாக கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் (ஐஏஎஸ் அதிகாரிகள்) 8 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 16 தொகுதிகளும் இடம்பெற்றுள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் வாக்காளர் உதவி மையமும் இயங்கி வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.