சென்னையில் பறவைக்காய்ச்சல்: `பீதியடைய வேண்டாம்; விழிப்புணவு அவசியம்..!' – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Spread the love

சென்னை அடையார், காந்தி நகர், பள்ளிக்கரணை, வேளச்சேரி, திருவான்மியூர், இ.சி.ஆர் சாலை மற்றும் ஓ.எம்.ஆர் சாலை உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து காகங்கள் தொடர்ந்து உயிரிழந்தன. இதனையடுத்து உயிரிழந்த காகங்களின் மாதிரிகளை காஞ்சிபுரத்தில் உள்ள கால்நடை நோய்த் தடுப்பு புலனாய்வுக் குழுவினர், கடந்த மாதத்தில் சேகரித்து போபாலில் உள்ள தேசிய விலங்கள் நோய் கட்டுபாட்டு ஆய்வு நிறுவனத்திற்கு சோதனைக்காக அனுப்பி வைத்திருந்தனர். இந்த சோதனையின் முடிவில் பறவைகளுக்கு H5N1 வைரஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து சென்னையில் பறவைக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளாக அரசு விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

பறவைக் காய்ச்சல்
பறவைக் காய்ச்சல்

அதில்…

  • கோழிப் பண்ணைகளுக்குள் வெளி நபர்களை அனுமதிக்கக் கூடாது.

  • ஒரு கோழிப் பண்ணையில் வேலை செய்பவர் பல பண்ணைகளுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும்.

  • பிற மாநிலங்களில் இருந்து கோழிகளையோ, கோழி இறைச்சியையோ கொண்டுவரக்கூடாது.

  • தமிழ்நாடு எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை அறிவுறுத்தி இருக்கிறது.

  • சில உயிரிழந்த பறவைகளை வெறும் கைகளால் தொடக் கூடாது.

  • உயிரிழக்கும் பறவைகள் மற்றும் பசு மாடுகளை எரிக்க வேண்டும் அல்லது ஆழமாக குழிதோண்டி புதைக்க வேண்டும்.

    – எனக் குறிப்பிட்டிருக்கிறது.

சென்னையில் பறவைக்காய்ச்சல் என்ற செய்தி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இது தொடர்பாக தமிழ்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனை தொடர்புகொண்டு பேசினோம்.

“அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் (DDs) தகுந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். திறந்தவெளியில் பறவைகள் ஏதேனும் இறந்து கிடந்தால், பொதுமக்கள் அதை நேரிடையாகக் கையால் தொடவோ அல்லது எடுக்கவோ வேண்டாம்.

மா.சுப்ரமணியன்
மா.சுப்ரமணியன்

இறந்த பறவைகளைக் கண்டால் உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். அதற்கென எண்கள் வழங்கப்பட்டிருக்கிறது. அதை அப்புறப்படுத்தும்போதும், உரிய பாதுகாப்புடன் அவற்றை ஆழமான குழி தோண்டிப் புதைக்க வேண்டும். குறிப்பாக, நோயால் பாதிக்கப்பட்டு இறந்த பறவைகளின் இறைச்சியை எக்காரணம் கொண்டும் உணவாக உட்கொள்ளக் கூடாது. வீடுகளில் கோழி மற்றும் வளர்ப்புப் பறவைகளை வளர்ப்பவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.

இருப்பினும், அவை திடீரென உயிரிழந்தால், அந்த இறைச்சியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இதுவே தற்போதைய முதன்மையான பாதுகாப்பு நடவடிக்கை. தற்போது மனிதர்களுக்கு இந்தத் தொற்று கண்டறியப்படவில்லை. பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே அதன் தீவிரத் தன்மை குறித்து முழுமையாகத் தெரியவரும். எனவே, தற்போதைக்குத் தற்காத்துக் கொள்வதும், சுகாதாரத்தைப் பேணுவதும் மட்டுமே நம் முன்னுள்ள வழி. மக்கள் பீதியடைய வேண்டாம். அரசு வெளியிட்டுள்ள விதிமுறைகளை முறையாகப் பின்பற்றினால், இந்தப் பாதிப்பிலிருந்து எளிதாகத் தப்பிக்கலாம். பாதுகாப்பாக இருப்போம்.” என்று தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *