சென்னை, கொளத்தூரைச் சேர்ந்தவர் காஞ்சனா. இவரின் மாமியாருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதனால் மாமியாரை அழைத்துக் கொண்டு காஞ்சனா, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு வந்தார். காஞ்சனாவின் மாமியாரை பரிசோதித்த டாக்டர்கள், தலையில் கட்டியிருக்கிறது. அதனால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக் கூறியதோடு மருத்துவமனையில் உள்நோயாளியாக 04.06.2025-ம் தேதி அனுமதித்தனர். மாமியாரை அருகிலிருந்து கவனித்துக் கொள்ள காஞ்சனாவும் சில தினங்கள் மருத்தவமனையில் தங்கியிருந்தார். 06.06.2025 -ம் தேதி மாமியாரை அழைத்துக் கொண்டு மயக்கவியல் டாக்டரை பார்க்க சென்றார். அப்போது அங்கிருந்தவர், தன்னை மயக்கவியல் டாக்டர் என காஞ்சனாவிடமும் அவரின் மாமியாரிடமும் அறிமுகம் செய்து கொண்டு மெடிக்கல் ரிப்போர்ட்களை பார்த்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து 07.06.2025-ம் தேதி காஞ்சனாவின் மாமியார் அட்மிட் செய்திருந்த வார்டுக்கு வந்த அந்த டாக்டர், மாத்திரைகளை எழுதி கொடுத்து 7-வது மாடிக்குச் சென்று வாங்கி வரும்படி காஞ்சனாவிடம் கூறியிருக்கிறார். அதனால் காஞ்சனாவும் மாத்திரைகளை வாங்க 7-வது மாடிக்கு சென்றிருக்கிறார். அப்போது அந்த டாக்டர், 7-வது மாடிக்கு வந்திருக்கிறார். 7-வது மாடியில் காஞ்சனா, மாத்திரைகளை வாங்க காத்திருந்தபோது அங்கு வந்த டாக்டர், உங்களுக்கும் ஹெல்த்தில் சில பிரச்னைகள் இருப்பது போல தெரிகிறது. அதனால் நீங்களும் ஸ்கேன் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார். அதன்படி காஞ்சனாவும் ஸ்கேன் எடுக்க ஆயத்தமாகியிருக்கிறார். ஸ்கேன் அறைக்குள் செல்வதற்கு முன்பு காஞ்சனா, தான் அணிந்திருந்த தங்க நகைகளை கழற்றி பையில் போட்டிருக்கிறார். அதைப்பார்த்த டாக்டர், காஞ்சனாவிடம் நகைகள், செல்போனை யாராவது திருடிச் சென்றுவிடுவார்கள். அதனால் என்னுடைய கேபினில் பத்திரமாக வைத்து விட்டு வருகிறேன் என அந்த டாக்டர் அக்கறையாக கூறியிருக்கிறார். அதைக் கேட்ட காஞ்சனா, அரசு மருத்துவமனையில் இப்படியொரு மனித நேய மிக்க டாக்டரா என்று நினைத்துக் கொண்டு அறையில் காத்திருந்திருக்கிறார்.