சென்னையை இந்தியாவின் வடிவமைப்புத் தலைநகராக (Design Capital) மாற்றும் நோக்கில், சென்னை ஐஐடி வளாகத்தில் “சென்னை டிசைன் ஃபெஸ்டிவல் 2026′ (Chennai Design Festival), நேற்று முன்தினம் (21.03.2026) மிகச்சிறப்பாக நடைபெற்றது.
காலையிலேயே ஐஐடி ஆடிட்டோரியத்தில் திரண்டிருந்த பொறியாளர்கள் மற்றும் கலைஞர்களின் முன்னிலையில், வடிவமைப்பு என்பது வெறும் பாடம் மட்டுமல்ல, அது கவனிப்பு மற்றும் பயிற்சியின் மூலம் உருவாகும் ஒரு கலை என்ற கருத்துடன் நிகழ்வு தொடங்கியது.
இயற்கை மற்றும் நம்பிக்கையைச் சார்ந்த வடிவமைப்பு
நிகழ்வின் தொடக்க உரையாற்றிய பேராசிரியர் சந்திபன் பந்தியோபாத்யாய், ஜப்பானிய புல்லட் ரயிலின் வேகத்தினால் ஏற்படும் சத்தத்தைக் குறைக்க மீன்கொத்திப் பறவையின் மூக்கு வடிவத்தைப் பயன்படுத்தியதை உதாரணமாகக் கூறி, வடிவமைப்பு என்பது இயற்கையைப் பார்த்துப் பழகும் வித்தை என்று விளக்கினார்.
தொடர்ந்து பேசிய சாம்சங் ரிசர்ச் சென்டர் இயக்குநர் சதீஷ் பாட்டீல், வடிவமைப்பு என்பது அழகை மட்டும் குறிப்பதல்ல, அது ஒரு நம்பிக்கை (Trust) என்று குறிப்பிட்டார். வாடிக்கையாளர்களின் சந்தேகத்தைப் போக்க வாஷிங் மெஷின்களில் ‘டிரான்ஸ்பரன்ட்’ மூடி கொண்டு வரப்பட்ட வரலாற்று ரகசியத்தையும் அவர் பகிர்ந்துகொண்டார்.