சென்னை, மயிலாப்பூர் பிடாரி அம்மன் கோயில் தெருவில் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக மயிலாப்பூர் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கடந்த ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், அங்கு சோதனை நடத்தி குடிநீர் கேன்களுடன் பதுக்கி வைத்திருந்த 20 லிட்டர் கள்ளச்சாராயத்தைப் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சென்னை மயிலாப்பூர் பிடாரி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த வனிதாவை (35) மயிலாப்பூர் போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
சென்னைக்கு எங்கிருந்து கள்ளச்சாராயம் கடத்தி வரப்படுகிறது என அடையாறு மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து அடையாறு மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீஸார் கூறுகையில், “கைதுசெய்யப்பட்ட வனிதா, அவரின் கணவர் அப்துல்லா ஆகியோரின் பின்னணியை விசாரித்தோம். இவர்கள் மீது ஏற்கெனவே கள்ளச்சந்தையில் மது விற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால் தற்போது வனிதாவை இந்த வழக்கில் வசமாக ஒரு டீம் சிக்க வைத்திருக்கும் ரகசிய தகவல் எங்களுக்குக் கிடைத்தது. உடனே சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தோம். அப்போது மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர், கள்ளச்சாராயத்தை 20 லிட்டர் தண்ணீர் கேன்களுடன் வைத்துவிட்டு செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அதைத் தொடர்ந்து பார்த்திபனைப் பிடித்து விசாரித்தோம். அப்போது அவர், வனிதாவை சிக்கவைக்க கள்ளச்சாராய கேனை அங்கு வைத்ததாகக் கூறினார். அதோடு பாத்திபன், மயிலாப்பூர் துணை கமிஷனரின் ஸ்பெஷல் டீமைச் சேர்ந்த 3 காவலர்கள் கூறியதால்தான் அப்படிச் செய்தேன் எனவும் உளறினார். உடனே இந்தத் தகவலை மயிலாப்பூர் துணை கமிஷனர், உயரதிகாரிகளுக்கு நாங்கள் தகவல் தெரிவித்தோம். கள்ளச்சாராயத்தைக் கடத்தி வந்த குற்றத்துக்காக பார்த்திபனைக் கைதுசெய்துள்ளோம்” என்றனர்.