கேரள மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாகப் பணிபுரிந்து வருகிறார். இவர் தோழியுடன் சேர்ந்து சொந்த ஊருக்குச் சென்று விட்டு கடந்த 04.01.2026-ம் தேதி சென்னை வந்தார். பின்னர் இருவரும் சென்னை சென்ட்ரல் பகுதியில் லாட்ஜில் தங்கியிருந்தனர். பின்னர் நர்ஸ், பாத்ரூமில் குளிக்கச் சென்றபோது, ஜன்னல் வழியாக மர்ம நபர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அதைக் கவனித்த நர்ஸின் தோழி சத்தம் போட்டுள்ளார்.
அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நர்ஸ், பாத்ரூமை விட்டு அவசர அவசரமாக வெளியில் வந்திருக்கிறார். இதையடுத்து இருவரும் சேர்ந்து வீடியோ எடுத்துக் கொண்டிருந்த மர்ம நபரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரின் செல்போனை வாங்கிப் பார்த்தபோது அதில் நர்ஸ் குளிக்கும் வீடியோ அழிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்னொரு பெண் ஒருவர் குளிக்கும் வீடியோ இருந்தது. அதைத் தொடர்ந்து லாட்ஜ் நிர்வாகத்துக்கு நர்ஸ் தகவல் தெரிவித்தார். அவர்கள் வந்து விசாரித்தபோது வீடியோ எடுத்தது ரூம் பாய் தனஞ்செய் பதி, (19) என்று தெரியவந்தது. இதையடுத்து நர்ஸ், வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார், பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) மற்றும் IT Act ஆகிய பிரிவுகளின் கீழ் தனஞ்செய் பதி மீது வழக்கு பதிவுசெய்தனர். அவரின் செல்போனையும் சைபர் க்ரைம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் தனஞ்செய் பதி, ஒடிசாவைச் சேர்ந்தவர். இவர், லாட்ஜில் தங்கியிருக்கும் பெண்கள் குளிக்கச் செல்லும் போது வீடியோ எடுத்து பார்ப்பதை வழக்கமாக வைத்திருப்பது தெரியவந்தது. விசாரணைக்குப் பிறகு தனஞ்செய் பதியை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.