சென்னை: பெண் காவலர் மர்ம மரணம்; உள்ளாடையுடன் சடலம் மீட்பு; கணவரிடம் விசாரணை

Spread the love

சென்னை எழும்பூர் காவல் குடியிருப்பில் வசித்து வருபவர் காவலர் சிலம்பரசன். இவரின் மனைவி புவனேஸ்வரி. இவர், எழும்பூர் குற்றப்பிரிவில் காவலராகப் பணியாற்றி வந்தார்.

சிலம்பரசனுக்கும் புவனேஸ்வரிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் புவனேஸ்வரி, வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக எழும்பூர் காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது.

உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், காவலர் புவனேஸ்வரியின் சடலத்தை மீட்டனர். அப்போது அவர் உள்ளாடை மட்டும் அணிந்திருந்ததாக எழும்பூர் போலீஸார் தெரிவித்தனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த எழும்பூர் போலீஸார், காவலர் புவனேஸ்வரியின் சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவலர் புவனேஸ்வரி
காவலர் புவனேஸ்வரி

பிரேதப் பரிசோதனையில் பெண் காவலர் புவனேஸ்வரி, தற்கொலை செய்து கொண்டதற்கான அறிகுறிகள் இருப்பதாக டாக்டர்கள் போலீஸாரிடம் தெரிவித்திருக்கிறார்கள். இருப்பினும் முழு பிரேதப் பரிசோதனை ரிப்போர்ட்டில்தான் காவலர் புவனேஸ்வரியின் மரணத்தைப் பற்றிய முழுத் தகவல் தெரியவரும்.

இந்தநிலையில் பெண் காவலர் புவனேஸ்வரியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். அதுதொடர்பாக எழும்பூர் போலீஸார், புவனேஸ்வரியின் கணவரான காவலர் சிலம்பரசனிடம் விசாரித்து வருகிறார்கள்.

இதுகுறித்து எழும்பூர் போலீஸார் கூறுகையில், “கடந்த 2016-ம் ஆண்டு புவனேஸ்வரி, தமிழக காவல்துறையில் காவலராகப் பணிக்குச் சேர்ந்திருக்கிறார். ஆவடி பட்டாலியனில் புவனேஸ்வரி பணியாற்றி வந்த நிலையில் அயலகப் பணி காரணமாக எழும்பூர் குற்றப்பிரிவில் வேலை பார்த்து வந்தார்.

சிலம்பரசனும் புவனேஸ்வரியும் காதலித்து வந்திருக்கிறார்கள். பின்னர், இரு வீட்டினர் சம்மதத்துடன் 2024-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்திருக்கிறார்கள். புவனேஸ்வரியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் குடும்பத்தினர் கூறியிருப்பதால் காவலர் சிலம்பரசனிடம் விசாரித்து வருகிறோம்.

சடலம்

விசாரணையில் திருமணத்துக்கு முன்பு புவனேஸ்வரி திருவண்ணாமலையைச் சேர்ந்த நண்பர் ஒருவருக்குக் கடனாக பணம் கொடுத்திருக்கிறார். ஆனால் அந்த நண்பரோ இதுவரை வாங்கிய கடனைத் திரும்ப புவனேஸ்வரிக்குக் கொடுக்கவில்லை. இந்தத் தகவல் சிலம்பரசனுக்குத் தெரியவந்ததும் கொடுத்த கடனைத் திரும்ப வாங்கும்படி புவனேஸ்வரியை அவர் கண்டித்திருக்கிறார்.

அதுதொடர்பாக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில் திருவண்ணாமலை நண்பர், பணத்தைக் கொடுக்காததால் புவனேஸ்வரி, திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகாரும் கொடுத்திருக்கிறார்.

இந்தநிலையில்தான் புவனேஸ்வரி, தூக்கில் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார். புவனேஸ்வரியின் கணவர் மது போதையிலிருந்ததால் அவரிடம் முழுமையாக விசாரிக்க முடியவில்லை.

போதை தெளிந்த பிறகு அவரிடம் விசாரித்தால் மட்டுமே முழு விவரம் தெரியவரும். புவனேஸ்வரி மரணம் தொடர்பாக ஆர்.டி.ஓ விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *