தலைநகரில் போதைப் பொருள் விற்பனை, கடத்தல் சம்பவங்களை தடுக்க போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு, சென்னை போலீஸ் கமிஷனர் அருண் தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்த டீம், சென்னை முழுவதும் போதைப் பொருள் நடமாட்டம் குறித்த தகவல்களை ரகசியமாக சேகரித்து அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறது. இந்தநிலையில்தான் சினிமா பிரபலங்களுக்கு போதைப் பொருள் சப்ளை செய்யப்படுவதாக இந்தப் பிரிவில் உள்ள அதிகாரிகளுக்கு சமீபத்தில் ரகசிய தகவல் கிடைத்தது. அதனால் போலீஸ் டீம் சந்தேக வளையத்துக்குள் சிலரை கொண்டு வந்து அவர்களின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்தனர். 04.02.2026-ம் தேதி இரவு, வளசரவாக்கம், மெகாமார்ட் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, அவ்வழியாக காரில் வந்த 4 பேரை போலீஸார் சோதனை செய்தனர். சோதனையில் காருக்குள் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருளை இருப்பதை போலீஸார் கண்டறிந்தனர். அதைத் தொடர்ந்து காரில் வந்த மாங்காடு பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்குமார் (31), கார்த்திக் ராஜா (31) காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த யஷ்வந்த் (25) நெசப்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ்வரன் (35) ஆகியோரைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர்.

விசாரணையில் இவர்கள் போதைப் பொருள் விற்பனை செய்யும் நெட்வொர்க் என தெரியவந்தது. மேலும் இவர்கள் கொடுத்த தகவலின்பேரில், போதைப் பொருள் வைத்திருந்த மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் (33), கேரளா, பாலக்காடு பகதியைச் சேர்ந்த அல்விபின்ஷா (27), சென்னை வடபழனியைச் சேர்ந்த நிவேதா (எ) வின்சி நிவேதா (26), மண்ணடியைச் சேர்ந்த தமீம் நிஸ்வான் (27), வடபழனியைச் சேர்ந்த அஞ்சு கிருஷ்ணா (30) ஆகியோரை போலீஸார் கைதுசெய்தனர். இவர்களிமிருந்து போதைப் பொருள்கள், 7 ஐபோன் உட்பட 10 செல்போன்கள், ஒரு கார், டைரி ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதில் அஞ்சு கிருஷ்ணா என்பவர் துணை நடிகையாக நடித்து வருகிறார். மற்றவர்கள் தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வருகின்றனர்.