சென்னை: விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை – தி.மு.க கவுன்சிலர், அ.தி.மு.க பிரமுகர் கைதான பின்னணி!

Spread the love

சென்னையில் குடியிருக்கும் 25 வயதான இளம்பெண், விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வருகிறார். கடந்த 25-ம் தேதி இவர், சென்னையிலிருந்து டெல்லி செல்லும் விமானத்தில் பணியிலிருந்தபோது திருவள்ளூரைச் சேர்ந்த பிரபாகரன், அவரின் நண்பன் தியாகு ஆகியோர் விமானத்தில் பயணித்திருக்கிறார்கள். அப்போது இருவரும் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. உடனே அவர்களை விமான பணிப்பெண், இருக்கையில் அமரும்படி கூறியிருக்கிறார். அதற்கு பிரபாகரனும் தியாகும் விமான பணிப்பெண்ணிடம் உனக்கு எந்த ஊரு என்று கேள்வி கேட்டிருக்கிறார்கள். உடனே பணிப்பெண், மதுரை என்று கூறியிருக்கிறார். அதைக்கேட்ட பிரபாகரனும் தியாகும் மதுரையில் ஆண்டிப்பட்டியா, கல்லுப்பட்டியா என கேட்டு கிண்டல் செய்திருக்கிறார்கள்.

அ.தி.மு.க பிரமுகர் தியாகு

அ.தி.மு.க பிரமுகர் தியாகு

உடனே பணிப்பெண், அங்கிருந்து சென்றதோடு இருவரும் பேசியதை விமானத்திலிருந்த தன்னுடைய உயரதிகாரிகளிடம் தெரிவித்திருக்கிறார். அதன்பிறகும் இருவரும் சேர்ந்து அந்தப் பணிப்பெண்ணை ஒருமையில் பேசி அழைத்திருக்கிறார்கள். பின்னர், அவருக்கு சொல்ல முடியாத வகையில் பாலியல் தொல்லையும் கொடுத்திருக்கிறார்கள். இதையடுத்து பாதிக்கப்பட்ட பணிப்பெண், பணி முடிந்ததும் மீனம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, 74 BNS act and 4 of TNPWH Act ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த குற்றச்சாட்டில் சிக்கிய பிரபாகரனுக்கும் தியாகுவுக்கும் போலீஸார் சம்மன் அனுப்பினர். ஆனால் அவர்கள் இருவரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்தநிலையில்தான் டெல்லியிலிருந்து சென்னைக்கு இன்னொரு விமானத்தில் 2-ம் தேதி இருவரும் வந்தனர். இந்தத் தகவல் கிடைத்ததும் இருவரையும் போலீஸார் பிடித்து விசாரித்தனர். விசாரணைக்குப் பிறகு இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “கைது செய்யப்பட்ட பிரபகாரன், திருவள்ளூர் நகராட்சியின் 6-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். மேலும் தி.மு.க-வில் இருக்கும் இவர், ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வருகிறார். இவரின் நண்பன் தியாகு இன்ஜினீயரிங், சட்டம் படித்துவிட்டு ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வருகிறார். இவர் அ.தி.மு.க பிரமுகர். கடந்த சில தினங்களுக்கு முன்புதான் இவருக்கு கட்சியில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணியின் துணை தலைவர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *