சென்னை: வீட்டு ஓனர் வீட்டில் கைவரிசை காட்டிய பெண் – போலி சாவி தயாரித்தது அம்பலம் – woman arrested in theft case

Spread the love

சென்னை, தண்டையார்பேட்டை, விநாயகபுரம் 10-வது தெருவில் வசித்து வருபவர் முருகன். இவரின் மனைவி பவானி. இவர் கடந்த 02.03.2026-ம் தேதி திருவொற்றியூர், வடிவுடையம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, இரவு வீட்டிற்கு வந்தார். அப்போது பீரோவிலிருந்த 9 1/2 சவரன் எடையுள்ள 3 தங்கச் செயின்கள் திருட்டுப் போயிருந்தன. அதனால் அதிர்ச்சியடைந்த பவானி, கதவின் பூட்டு உடைக்கப்படாமல் நகைகள் எப்படி திருடப்பட்டது என குழப்பமடைந்தார். பின்னர் இது குறித்து காசிமேடு காவல் நிலைய குற்றப்பிரிவில் பவானி புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது பவானி வீட்டின் 2-ம் தளத்தில் வாடகைக்கு குடியிருக்கும் பவித்ரா எனத் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து பவித்ராவிடம் போலீஸார் விசாரணை தொடங்கினர். விசாரணைக்குப்பிறகு பவித்ராவை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து காசிமேடு போலீஸார் கூறுகையில், “பவானி வீட்டின் 2-வது தளத்தில் பவித்ரா வாடகைக்கு குடியிருந்து வருகிறார். சில வாரங்களுக்கு முன்பு பவானி வீட்டின் சாவி கீழே கிடந்திருக்கிறது. அதை எடுத்த பவித்ரா, போலி சாவி ஒன்றை தயாரித்திருக்கிறார். பின்னர் பவானி வீட்டில் இல்லாத போது போலி சாவி மூலம் வீட்டை திறந்த பவித்ரா, பீரோவிலிருந்த நகைகளை திருடியிருக்கிறார். பவானி வீட்டில் நகைகள் திருட்டு போனது குறித்து எங்களிடம் புகாரளித்தார். வீட்டின் பூட்டு உடைக்காமல் நகைகள் திருட்டு போயிருந்ததால் தெரிந்தவர்களே இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என முடிவு செய்தோம். அதுதொடர்பாக பவானியிடம் விசாரித்தபோதுதான் அவர், வீட்டின் சாவி தொலைந்த தகவலை எங்களிடம் தெரிவித்தார். அப்போதுதான் பவானி வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் பவித்ரா மீது எங்களின் சந்தேகப் பார்வை விழுந்தது. பின்னர் பவித்ராவிடம் விசாரித்தபோது நகைகளை திருடியதை அவர் ஒப்புக் கொண்டார். அவரிடமிருந்து திருடப்பட்ட நகைகள், போலி சாவிகளையும் பறிமுதல் செய்திருக்கிறோம்” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *