இதுகுறித்து செல்வபெருந்தகைக்கு நெருக்கமானவர்களிடம் நாம் பேசியபோது, “ஏற்கனவே டெல்லியில் வைத்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுடன் ராகுல், கார்கே, கே.சி.வேணுகோபால் உள்ளிட்டவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது தி.மு.க குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்தும் வரை கூட்டணி குறித்து எந்த கருத்தையும் யாரும் சொல்ல வேண்டாம் என்று கண்டிப்புடன் கூறினார்கள்.
அதன்பிறகும் விருதுநகர் எம்.பியும் காங்கிரஸ் தேசிய செயலாளராகவும் உள்ள மாணிக்கம் தாகூர் தொடர்ந்து கூட்டணிக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை தெரிவித்துவந்தார். குறிப்பாக மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தை நடத்தி அதில் கூட்டணி குறித்த தீர்மானத்தையும் போட்டார்கள். மேலும், மாணிக்கம் தாகூருடன், தமிழக காங்கிரஸ் கட்சி சட்டமன்றகுழு தலைவராக உள்ள ராஜேஷ் குமாரும் சத்தமில்லாமல் தனது ஆதரவாளர்கள் மூலம் தி.மு.க கூட்டணிக்கு எதிராக கருத்துக்களை பரப்பி வந்தார். இது மாநில தலைவராக உள்ள செல்வபெருந்தகைக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

“மாநில தலைவராக நான் இருக்கும் போதே ஆளாளுக்கு கருத்து சொல்வதும், தீர்மானம் போடுவதாக இருந்தால் தலைவர் பதவியில் நான் ஏன் இருக்க வேண்டும்? ” என்று கடுகடுத்துவந்தார்.
டெல்லி தலைமையும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அமைதிகாத்தது இவரை மேலும் சூடாக்கியது. இந்நிலையில் தான் கார்கே பெங்களூர் வந்த தகவல் தெரிந்து அவரை சந்திக்க முடிவெடுத்தார். இந்த சந்திப்பில் தி.மு.க கூட்டணி நமக்கு நம்பகமான கூட்டணி. கொடுக்குற சீட்டை வெற்றியாக மாற்றிக்கொள்ளலாம். அதே நேரம் த.வெ.க-வுடன் கூட்டணி அமைப்பது இப்போதுள்ள நிலையில், தற்கொலைக்கு சமம். நமக்கு கிடைக்கும் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கையும், எம்.பிக்களையும் நாமே கோட்டைவிடுவதாக மாறிவிடும் என்று விளக்கியுள்ளார். ஏற்கனவே கார்கேவும் தி.மு.க கூட்டணியில் தொடர்வதே உத்தமம் என்கிற மனநிலையில் இருக்கிறார்.
அதோடு செல்வபெருந்தகை, “மாணிக்கம் தாகூர் போன்றவர்கள் இப்படி கூட்டணிக்கு குந்தகம் விளைக்கும் வகையில் கருத்து தெரிவிப்பதற்கு யார் அதிகாரம் கொடுக்கிறார்கள். இனிமேல் அவர் பேசினால் டெல்லி மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பொங்கிவிட்டார்.
கார்கேவும் “இனி கூட்டணி விசயங்கள் குறித்து யாரும் எந்த கருத்தும் சொல்லாமல் பார்த்துக்கொள்கிறேன். தி.மு.க தரப்பில் எண்ணிக்கையை மட்டும் அதிகரித்து கேட்கலாம்” என்று முடித்துள்ளார்.