அமைச்சர் சேகர் பாபுவின் துறைமுகம் தொகுதியில் ரஜினி ரசிகர் மன்ற மாவட்டத் தலைவர் அசோக் குமாரை வேட்பாளராக நிறுத்த தவெக ஆயத்தமாகி வருவதாக கிசுகிசுக்கின்றனர் பனையூர் வட்டாரத்தினர்.
ஆனால், அட்வகேட் ஒருவரும் இதே தொகுதியில் சீட் கேட்டு முட்டி மோதி வருவதால் போட்டி சுவாரஸ்யமடைந்திருப்பதாக கூறுகின்றனர் விவரமறிந்தவர்கள்.

சில வாரங்களுக்கு முன்பு ரஜினி ரசிகர் மன்றத்தின் தென் சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் `சினோரா’ அசோக் குமார் ஆதவ் மூலமாக விஜய்யின் முன்னிலையில் தவெகவில் இணைந்திருந்தார். தொழிலதிபரான இவர் கட்சிக்குள் வரும்போதே துறைமுகம் தொகுதியை குறிவைத்துதான் வந்தார் என்கின்றனர் தவெகவினர்.
‘அசோக் குமார் தொழில்ரீதியாக ஆதவ்வுக்கு நெருக்கமானவர். அந்த பழக்கத்தில்தான் தலைவரையே நேரில் சந்தித்து கட்சியிலும் இணைந்தார். தலைமை சைதாப்பேட்டைக்கும் துறைமுகத்துக்கும் மட்டுமே இன்னும் மா.செக்களை நியமிக்கவில்லை. சைதாப்பேட்டை தொகுதியை ஏற்கனவே பொதுச்செயலாளர் ஆனந்துக்கு நெருக்கமான ஒரு தொழிலதிபர் கேட்கிறார். அவருக்கு தொகுதியை வாங்கி கொடுக்கும் முடிவில் பொதுச்செயலாளர் இருக்கிறார்.
துறைமுகம் தொகுதிக்கு அட்வகேட் விஜயகுமார் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார். கடந்த வாரத்தில் தலைமை நடத்திய நேர்காணலிலும் கலந்துவிட்டு வந்தார். இவரே சமீபத்தில் கட்சிக்குள் வந்தவர்தான். ஆனாலும் மக்கள் இயக்க நிர்வாகிகளாக இருந்தவர்கள் யாரும் சீட் கேட்கவில்லை என்பதால், தனக்கு சீட் கிடைக்கும் என நம்பிக்கையோடு இருந்தார். இப்போது அதில்தான் சிக்கலே வந்திருக்கிறது.

ரஜினி ரசிகரான அசோக்கும் துறைமுகத்தை கேட்கிறார். ஆதவ் தன்னுடைய கோட்டாவில் அசோக்குக்கு சீட் பெற்றுத்தர முயற்சிக்கிறார். ஆதவ்வே நேரடியாக சிபாரிசு செய்வதால் அசோக்கின் பெயரே துறைமுகம் தொகுதிக்கு டிக் ஆக வாய்ப்பிருக்கிறது’ என்கின்றனர் உள்விவகாரம் அறிந்த நிர்வாகிகள் சிலர்.
‘விஜய் அண்ணங்கிட்டயே துறைமுகம் தொகுதியை நான் பார்த்துக்கிறேன்னு அசோக் அண்ணன் சொல்லிடாரு’ என ஆதவ்வும் நேற்று கொளத்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார். ஆக, ரஜினி ரசிகருக்காக ஓட்டு கேட்க தயாராகி வருகின்றனர் தவெகவினர்?