இந்த நிலையில், டிசம்பர் 4ஆம் தேதி சேலத்தில் விஜய்யின் தேர்தல் பிரச்சார பரப்புரை கூட்டத்திற்கு அனுமதி கேட்டு, தமிழக வெற்றி கழகத்தின் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் தலைமையில் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்றார்.
குறிப்பாக சீலநாயக்கன்பட்டி, போஸ் மைதானம், கோட்டை மைதானம் ஆகிய மூன்று இடங்களில் அனுமதி கேட்டுள்ளனர்.
ஆனால், டிசம்பர் 3ஆம் தேதி கார்த்திகை தீபம் மற்றும் டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் ஆகிய இரண்டு தினங்களுக்கு இடையே டிசம்பர் 4ஆம் தேதியில் அனுமதி அளிக்கப்படாது. காவல்துறையினர் ஆங்காங்கே பாதுகாப்பு பணிக்கு செல்வார்கள். எனவே மாற்று தேதியை காவல்துறை தரப்பில் கேட்டனர்.

தமிழக வெற்றி கழகத்தின் தலைமையை கேட்டு தகவல் தெரிவிப்பதாக சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் கூறியுள்ளார்.
அந்த தேதியை தவிர்த்து மற்ற தேதிகளில் அனுமதி அளிக்கப்படும் எனவும் சேலம் மாநகர காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
குறிப்பாக தற்பொழுது காவல்துறை முடிவு செய்து சீலநாயக்கன்பட்டி பகுதியில் அனுமதி அளிப்பதற்கு தயாராக உள்ளதாகவும், ஆனால், தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக கொடுக்கப்பட்ட மனுவில் மக்கள் கூட்டத்தின் எண்ணிக்கை குறிப்பிடப்படாமல் உள்ளது. தேர்தல் பிரச்சார பரப்புரைக்கு, எவ்வளவு மக்கள் கூட்டம் வரும் என்று எண்ணிக்கை தெரிவித்தால் அதற்கு ஏற்றார் போல் இடம் முடிவு செய்வது குறித்து அடுத்த கட்ட முடிவுகள் எடுக்கப்படும் என்று சேலம் மாநகர காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.