சேலம் தவக விஜய் பரப்புரை கூட்டம் ஒருவர் பலி: தொடரும் சோகம்  – Kumudam

Spread the love

சேலத்தில் விஜய் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற சூரஜ் (37) என்பவர் உயிரிழந்தார். தமிழக வெற்றி கழகத்தின் சேலம் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று சீலநாயக்கன்பட்டி அடுத்த தாளமுத்து நடராஜன் மைதானத்தில் இன்று நடந்தது. இதில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு நிர்வாகிகள் மத்தியில் பேசினார். இக்கூட்டத்தில் தவெக-வைச் சேர்ந்த 4,998 நிர்வாகிகள் மட்டுமே கலந்துகொள்ள போலீசார் அனுமதி அளித்து இருந்தது.

இதனையடுத்து நிர்வாகிகளை மட்டும் கூட்டம் நடக்கும் திடலுக்குள் அனுமதிக்கும் வகையில், கியூஆர் கோடுடன் கூடிய அட்டை வழங்கப்பட்டது. கூட்ட திடலுக்கு முன்பு நின்றிருந்த போலீசார் சம்பந்தப்பட்ட அட்டைகளை ஸ்கேன் செய்து, நிர்வாகிகளை மட்டும் உள்ளே அனுமதித்து இருந்தனர். 

முன்னதாக, இன்று காலை 10 மணிக்கு சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் தவெக தலைவர் விஜய் புறப்பட்டார். சுமார் 11.30 மணியளவில் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வந்த விஜய், அங்கிருந்து கார் மூலம் கூட்டம் நடைபெறும் சீலநாயக்கன்பட்டி மைதானத்திற்கு வந்தடைந்தார். பின்னர் தனது பிரசார வாகனத்தின் மீது ஏறி, நிர்வாகிகள் மத்தியில் விஜய் பேசினார். 

நிர்வாகிகள் கூட்டத்தை முன்னிட்டு மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி தலைமையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அப்போது; சேலம் கூட்டத்தில் 3 மணி நேரத்துக்கு மேலாக கடும் வெயிலில் காத்திருந்ததால் சிலர் மயக்கமடைந்தனர். விஜய் கூட்டத்தில் நாற்காலிகள் எதுவும் அமர இல்லாததால் 3 மணி நேரத்துக்கு மேலாக வெயிலில் நின்றிருந்தவர்கள் மயக்கம் அடைந்தனர். 

வெயில் காரணமாக சிலர் மயக்கமடைந்தபோதும் விஜய் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சூரஜ் உயிரிழந்தார். உயிரிழந்த சூரஜ் சேலத்தில் வெள்ளி பட்டறையில் பணியாற்றி வந்த தொழிலாளி என்பது குறிப்பிடதக்கது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *