சேலம் மாவட்டம் கருமந்துறை அடுத்துள்ள கிராங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். திமுக கிளை செயலாளராக உள்ளார். ராஜேந்திரனுக்கும், பக்கத்து தோட்டத்தில் வசித்து வரும் இவரது உறவினர்களான ராஜமாணிக்கம், பழனிசாமி ஆகியோருக்கும் இடையே நிலத்தகராறில் ஏற்பட்ட முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று இரவு ராஜேந்திரன் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, வனப்பகுதியில் மறைந்திருந்த மர்ம நபர்கள் நாட்டு துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் உடலில் குண்டு பாய்ந்த நிலையில் ராஜேந்திரன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த கரியக்கோயில் மற்றும் கருமந்துறை போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர், ராஜேந்திரன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இக்கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், இது குறித்து சந்தேகப்படும்படி உள்ள இருவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிலத்தகராறு காரணமாகக் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து மூன்று தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திமுக பிரமுகர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம், சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.