சேலம் மாவட்டத்தில் பள்ளி வளாகத்தில் ஆசிரியை ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சேலம், ஓமலூர் அருகே கமலாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஸ்ரீவித்யா என்பவர் ஆசிரியராகப் பணிப்புரிந்து வந்திருக்கிறார். குடும்ப பிரச்னை காரணமாக ஆசிரியை ஸ்ரீவித்யாவை பள்ளி வளாகத்திற்குள் புகுந்து அவரின் கணவர் விஜயமுருகனே வெட்டிக் கொலை செய்திருக்கிறார்.

இதனையடுத்து விஜயமுருகன் அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறார். ரத்த வெள்ளத்தில் கிடந்த ஸ்ரீவித்யாவை பள்ளி ஊழியர்கள், ஆசிரியர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். இருப்பினும் ஸ்ரீவித்யா உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அங்கிருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அரசு பள்ளியில் புகுந்து ஆசிரியையை வெட்டிக்கொன்ற விஜயமுருகனை வலைவீசித் தேடி வருகிறார்கள்.