தேசிய ஜனநாயகக் கூட்டணியில் டிடிவி தினரனின், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், அந்த 11 தொகுதிகள், அங்கு போட்டியிடும் உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
`அதிமுக-வை மீட்பதே லட்சியம்” என்கிற முழக்கத்தோடு 2018, மார்ச் 15-ம் தேதி `அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கினார் டி.டி.வி.தினகரன். முதன்முறையாக 2019-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அந்தக் கட்சி கிட்டத்தட்ட ஆறு சதவிகித வாக்குகளைப் பெற்று அதிமுக-வினருக்கு அதிர்ச்சி கொடுத்தது. தொடர்ந்து நடந்த 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் கணிசமான வாக்குகளைப் பெற்றது அ.ம.மு.க. குறிப்பாக, ஆண்டிபட்டி, பெரியகுளம், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க-வின் வெற்றியை மடைமாற்றியது. தொடர்ந்து, 2021 சட்டமன்றத் தேர்தலில்,தே.மு.தி.மு.க., எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தது.
165 தொகுதிகளில் போட்டியிட்டு, 2.35 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றது. கோவில்பட்டியில் போட்டியிட்ட டிடிவி தினகரனே வெற்றிவாய்ப்பை இழந்தார். இந்தநிலையில், 2026 தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் டிடிவி தினகரனுக்கு, 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்தத் தொகுதிகள் குறித்த உத்தேச தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த வகையில், சென்னையில் சைதாப்பேட்டை, திருப்பத்தூர், சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, தேனி மாவட்டத்தில் பெரியகுளம், திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குநேரி, திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருச்சி மாவட்டத்தில் திருச்சி மேற்கு, மதுரையில் மதுரை மத்தி, தஞ்சாவூரில் ஒரு தொகுதி, தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம், பூந்தமல்லி உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிடுவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது.