சென்னை: சோனி மியூசிக் நிறுவனம், எக்கோ ரெக்கார்டிங் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள ஓரியண்டல் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், இசையமைப்பாளர் இளையராஜா இசையை வணிக ரீதியாக பயன்படுத்தி ஈட்டிய வருமானம் தொடர்பான விவரங்களை சோனி நிறுவனம் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, இளையராஜா தரப்பில், “சோனி நிறுவனம் இதுவரை எந்த பதில்மனுவும் தாக்கல் செய்யவில்லை. தற்போது வெளியாகியுள்ள ‘டியூட்’என்ற திரைப்படத்தில் கூட இளையராஜாவின் 2 பாடல்கள் பயன்படுத்தி உள்ளனர்.” என்று கூறப்பட்டது.
சோனி நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன், “வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யத் தயாராக உள்ளோம். இளையராஜாவின் 500-க்கும் மேற்பட்ட இசை அமைப்புகளின் பதிப்புரிமை தொடர்பான வழக்கை மும்பை உயர் நீதிமன்றத்தில் இருந்து சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி சோனி நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு இளையராஜா பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.” என்று வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என்.செந்தில் குமார், ‘டியூட்’ திரைபடத்தில் பாடல்களை பயன்படுத்தியது தொடர்பாக தனியாக இளையராஜா தரப்பில் வழக்கு தொடரலாம் என்றார். தற்போது சோனி நிறுவனம் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 19-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.