கபில் பீச்
அமைதியான மற்றும் அழகான சூழலை விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும். கூட்டம் அதிகம் இல்லாத கடற்கரையைத் தேடுபவர்களுக்கு இது மிகவும் பொருத்தமான இடமாகும். கடற்கரையும், அதன் அருகில் ஓடும் பேக்வாட்டர்ஸையும் ஒருங்கே கொண்டுள்ளது.. அழகான சூரிய அஸ்தமனக் காட்சிகளைக் காணலாம்..
ஜடாயு பார்க்
ராமாயணத்தில், ஜடாயு (ராட்சத அளவிலான பறவை) பெரும் அசுரனான ராவணனுடன் சண்டையிட்டு இந்த இடத்தில் விழுந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது இது மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில், 65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு இயற்கை பூங்கா மற்றும் சுற்றுலா மையமாகும். இங்கு பிரம்மாண்டமான ஜடாயு பறவையின் சிலை முக்கியமான ஈர்ப்பு.,
கேபிள் காரில் மேலே ஏறும் வசதியும் உள்ளது.. நாங்கள் ஜடாயு மலை உச்சிக்கும் பயணம் செய்தோம். கேபிள் கார் மூலம் மலையின் மீது ஏறுவது ஒரு சிலிர்ப்பான அனுபவம். ஜடாயுவின் அற்புதமான அமைப்பு உண்மையிலேயே மனதைக் கவரக்கூடியது. இந்த இடம் மிகவும் புனிதமான இடமாக கருதப்படுகிறது.
இங்கு இயற்கையின் அழகை உண்மையிலேயே அனுபவிக்க முடியும். அடிக்கடி மழை பெய்யும் மற்றும் மலையைச் சுற்றி குளிர்ந்த காற்று வீசும். மலை உச்சியிலிருந்து பசுமையான விரிந்து பரந்த காடுகளைக் காணலாம். நாங்கள் இங்கு சுற்றிப் பார்த்து விட்டு திரும்பும்போது பெருமழை பெய்ய ஆரம்பித்து விட்டது.
கேபிள் காருக்காக ஒரு இடத்தில் காத்திருந்தோம். எங்களுக்கு முன் சென்றவர்களின் கேபிள் கார் பழுதடைந்துவிடவே பாதியிலேயே நின்று விட்டது.. மேலும் மழையும் வலுக்கவே மற்ற கேபிள் கார்களையும் நிறுத்தி விட்டாகள். வெகு நேரம் மலையின் மேல் காத்திருந்தோம். வெகு நேரம் கழித்து ஒரு மினி வேனில் அந்த குறுகிய மலைப் பாதை வழியாக கீழே அழைத்துச் செல்லப்பட்டோம். கொட்டும் மழையில் மலைச் சரிவுகளின் குறுகிய பாதையில் வண்டி ஒரு பக்கமாக சாய்ந்தவாறு மெதுவாகக் கீழே இறங்கியது. எங்களுக்கு வண்டியிலிருந்து இறங்கும் வரை திகிலாக இருந்தது.
அழகான கடற்கரைகள், அமைதியான வனப்பகுதி, எங்கும் பசுமையான இடங்கள், உயர்ந்த மலைகள் ,குன்றுகள், கோயில்கள் மற்றும் கேரள உணவுடன் உபசரிக்கும் மலையாள சேட்டன்கள் என சற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது வர்கலா..
-வி. ரத்தினா
ஹைதராபாத்