ஜனநாயகன்: `யு/ஏ சான்றிதழ் வழங்குக' – உயர் நீதிமன்றம்; உடனடி மேல்முறையீடு! தீர்ப்பின் முழு விவரம்

Spread the love

நடிகர் விஜய், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ஜனநாயகன். இந்த திரைப்படத்தை கே.வி.என். புரோடக்‌ஷன் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. அ. வினோத் இயக்கியுள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இந்த திரைப்படம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்காக இந்த திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. இந்த படத்தை கடந்த மாதம் பார்த்த தணிக்கை வாரியம் உறுப்பினர்கள், படத்து யு/ஏ சான்றிதழ் வழங்க பரிந்துரைத்தனர். இதன்பின்னர் இந்த திரைப்படத்தில் மத ரீதியான ஆட்சேபனைக்குரிய காட்சிகளும், பாதுகாப்பு படைகள் தொடர்பான சின்னங்களும் இடம் பெற்றுள்ளதால், இந்த படத்தை மறுஆய்வு குழு பார்வையிட்டு முடிவு செய்ய வேண்டும் என்று தணிக்கை வாரியம் தலைவர் கடந்த 5-ந்தேதி உத்தரவிட்டார்.

ஜனநாயகன்

இன்று தீர்ப்பு

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில், கே.வி.என் புரோடக்சன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். அப்போது, ஆட்சேபனைக்குரிய காட்சிகள் இடம் பெற்றுள்ளதால், இந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரிய தலைவர் பரிந்துரைத்ததாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த 7-ந்தேதி உத்தரவிட்டார். இந்தநிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று காலையில் பிறப்பித்தார்.

அதிகாரம் இல்லை

அதில், ‘‘படத்தை தணிக்கை வாரியம் குழு பார்த்து, யு/ஏ சான்றிதழ் வழங்கலாம் என்று பரிந்துரை செய்து விட்டது. அந்த குழுவில் இடம் பெற்று ஒரு உறுப்பினர், `தன் கருத்தை பரிசீலிக்கவில்லை. மத ரீதியான மற்றும் பாதுகாப்பு படை சின்னங்கள் தொடர்பான காட்சிகள் உள்ளது. இதில் தன் கருத்தை குழுவில் பரிசீலிக்க வில்லை’ என்று புகார் செய்ததால், இந்த படத்தை மறு ஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரியம் தலைவர் பரிந்துரை செய்துள்ளார்.

ஆனால், படத்தை பார்த்து தணிக்கை சான்றிதழ் வழங்க தணிக்கை குழுவில் இடம் பெற்ற பெரும்வாரியான உறுப்பினர்கள் பரிந்துரை செய்த பிறகு, இதுபோல மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரை செய்ய தணிக்கை வாரியத் தலைவருக்கு சட்டப்படி அதிகாரம் இல்லை. எனவே, ஜனநாயகன் படத்தை மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரை செய்த தணிக்கை வாரிய தலைவரின் உத்தரவை ரத்து செய்கிறேன். இந்த படத்துக்கு தணிக்கை சான்றிதழை உடனே வழங்கவேண்டும்’’ என்று நீதிபதி கூறியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம்

உடனே மேல்முறையீடு

இந்த தீர்ப்பை எதிர்த்து அடுத்த சில நிமிடங்களில், தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்ய முடிவு செய்தது. தீர்ப்பு அளித்த அடுத்த சில நிமிடங்களில், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், அந்த மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் தனி நீதிபதி தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் கொண்ட முதல் பெஞ்சில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் முறையீடு செய்தார்.

இந்த முறையீட்டை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யுங்கள், அந்த வழக்கு எப்போது விசாரணைக்கு எடுக்கப்படும்? என்பதை பின்னர் அறிவிப்பதாக கூறினர். அதற்கு வருகிற 12-ந்தேதி (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கூறினார். அதற்கு, முதலில் வழக்கை தாக்கல் செய்யுங்கள் என்று நீதிபதிகள் பதில் அளித்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *