கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் த.வெ.க. உயர்மட்ட நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், அக்கட்சியின் வேட்பாளர்கள் கனிமொழி, சுனில் ஆனந்த் ஆகியோரைச் சந்தித்து தேர்தல் பணிகள் தொடர்பாகக் கலந்துரையாடினார்.
பின்னர் பேசிய அவர் கூறியதாவது, ‘’புதிய தலைமை தமிழ்நாட்டுக்கு வேண்டும் என்பது மக்களின் எண்ணமாக இருக்கிறது. தற்போது ஆட்சியில் தீய சக்தியாகவும், ஊழல் ஆட்சியாகவும் இருக்கக்கூடிய தி.மு.க.வை தமிழகத்தில் இருந்து விரட்ட வேண்டும் என்பதுதான் மக்களின் ஆசையாக உள்ளது. மக்களின் ஆசையை நிறைவேற்றும் ஒரே சக்தி த.வெ.க.தான்.
மக்கள் நமக்கு வாக்களிக்க தயாராக உள்ளார்கள். அந்த வாக்குகளைச் சிந்தாமல் சிதறாமல் பெற வேண்டியது நம்முடைய கடமை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செயல்படக்கூடிய ஒரே இயக்கம் த.வெ.க. தான்.
பத்து முறை தோல்வி அடைந்த எடப்பாடி பழனிச்சாமியால் தி.மு.க.வை வீழ்த்த முடியாது. அதற்கு மாற்றாக நோட்டாவிற்கு வாக்களிக்க வேண்டாம், அது வீணாகிவிடும். எனவே அனைத்து ஓட்டுகளையும் த.வெ.க.விற்கு அளிக்க வேண்டும்.

தி.மு.க. 8 ஆயிரம் ரூபாய் டோக்கன் கொடுத்துள்ளது. இருந்தாலும் அவர்களால் வெற்றிபெற முடியாது. ஆகவே நாம் யாரும் கவலைப்பட வேண்டாம். மக்கள் வரிப்பணத்தில் இருந்து ஒரு ரூபாய் கூட எடுக்க மாட்டேன் என்று விஜய் கூறியுள்ளார். இதனை வேறு எந்தக் கட்சிகளும் கூற முடியாது.
ஜனநாயகன் திரைப்படத்தை முழுமையாக ஆன்லைனில் வெளியிட்டு, ஜனநாயகத்தை முழுமையாக குழி தோண்டி புதைத்துள்ளார்கள். அதை யார் செய்தார்கள் என்று பார்க்க வேண்டும். அந்தத் துறைக்கான அமைச்சர் யார்?, எல்.முருகன். பழனி முருகனை வேண்டுகிறேன், எல்.முருகனைத் தோற்கடித்து டெல்லிக்கு அனுப்ப வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது. சிபிஐ, ஜனநாயகன் கசிந்தது போன்ற அத்தனையையும் தாங்கி கொண்டு நமது தலைவர் நமக்காக வருகிறார்” இவ்வாறு அவர் கூறினார்.