ஜம்மு – காஷ்மீரில் தொடரும் மர்ம மரணங்கள்… காரணம் என்ன?

Dinamani2f2025 01 192fx2imvr522fimage 1.jpg
Spread the love

ஜம்மு – காஷ்மீரில் மர்மக் காய்ச்சலால் தொடர்ந்து பலர் பலியாகி வருவதைத் தொடர்ந்து மத்திய அமைச்சரகத்தின் உயர்மட்டக் குழு இன்று ஆய்வு செய்ய விரைந்துள்ளனர்.

ஜம்மு – காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் உள்ள பூதல் கிராமத்தில் கடந்த டிச. 7 முதல் ஜனவரி 17 வரை 16 பேர் மர்மக் காய்ச்சலால் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் நேற்று மேலும் ஒருவர் பலியாகியுள்ளார்.

முகமது அஸ்லாம் என்பவரின் கடைசி மகனான யாஸ்மீன் கௌசார் ஜம்முவில் உள்ள எஸ்எம்ஜிஎஸ் மருத்துவமனையில் மர்மக் காய்ச்சலுகு சிகிச்சை எடுத்துவந்த நிலையில் நேற்று (ஜன. 18) மாலை பலியானார். இவருடடைய தாத்தா, பாட்டி உள்பட உடன் பிறந்த ஐந்து பேர் கடந்த வாரம் பலியாகினர்.

கடந்த டிச. 7 முதல் 12 வரை இதே கிராமத்தில் வேறு இரு குடும்பங்களைச் சேர்ந்த 9 நபர்கள் மர்மக் காய்ச்சலுக்கு பலியாகினர்.

இதையும் படிக்க| மகா கும்பமேளாவில் பயங்கர தீ விபத்து!

மர்மக் காய்ச்சல் தாக்கிய நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட சில நாட்களுக்குள் உயிரிழப்பதற்கு முன்பு காய்ச்சல், வலி, குமட்டல், சுயநினைவை இழத்தல் போன்ற அறிகுறிகள் காணப்படுவதாக அவர்களின் உறவினர்கள் கூறியுள்ளனர்.

குறிப்பிட்ட சில வாரங்களுக்குள் 3 குடும்பங்களைச் சேர்ந்த நபர்கள் மர்மக் காய்ச்சலால் இவ்வாறு பலியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த மரணங்களுக்கான காரணங்கள் குறித்து விசாரிக்க உயர்மட்டக் குழு ஒன்றை நியமித்தார்.

“ஜம்மு காஷ்மீர் சுகாதாரத் துறை மற்றும் பிற துறைகள் இந்த உயிரிழப்புகளை விசாரித்து வருகின்றனர். ஆனால் சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. உள்துறை அமைச்சர் உயர்மட்ட நிபுணர்கள் குழுவை அமைத்துள்ளார். அவர்கள் இங்கு ஆய்வு செய்ய வரவுள்ளனர். இதுகுறித்த உண்மை வெளிச்சத்திற்கு வந்தவுடன் நாங்கள் உங்களுக்கு விளக்குகிறோம்,” என்று லெப்டினன்ட் ஆளுநர் மனோஜ் சின்ஹா ​​இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த நிலையில், 16 பேர் கொண்ட உயர்மட்டக் குழு இன்று மாலை ரஜோரி மாவட்டத்திற்கு வந்தடைந்ததாகவும், திங்கள் (ஜன. 20) முதல் நகரத்திலிருந்து 55 கி.மீ தொலைவில் உள்ள பூதல் மலை கிராமத்திற்குச் செல்ல இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிக்க| சைஃப் அலிகான் வழக்கு: குற்றவாளி வங்கதேசத்தவர் இல்லை… வழக்கறிஞர் தகவல்!

பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க மத்திய குழுவினர் உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து செயல்படவுள்ளனர்.

இறப்புகளுக்கான காரணங்கள் குறித்து ஆய்வுசெய்ய நாட்டின் புகழ்பெற்ற சுகாதார நிறுவனங்களின் நிபுணர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து வேறு கோணங்களிலும் விசாரிக்க காவல்துறை சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *