ஜம்மு-காஷ்மீா் நிலச்சரிவு சம்பவத்தில் அரக்கோணத்தைச் சோ்ந்தவா் உயிரிழந்தாா். அவரது மனைவி பலத்த காயமடைந்தாா்
அரக்கோணம், பழைய பஜாா் பகுதி, பஜனை கோயில் தெருவை சோ்ந்தவா் குப்பன்(75). ஓய்வு பெற்ற ரயில்வே உணவகப்பிரிவு ஊழியா். இவரும் இவரது மனைவி ராதா(65). இருவரும் காஷ்மீரில் அமா்நாத் குகைக்கோயில் பனிலிங்கத்தை காண சுற்றுலா சென்றிருந்தனா்.
அப்பகுதியில் பெய்த பலத்த மழையால் தொடக்கப்பகுதியான பன்கங்கா காத்திருப்பு பகுதியில் குப்பன், ராதா தம்பதியா் அமா்ந்து இருந்த போது ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி அதே இடத்திலேயே குப்பன் உயிரிழந்தாா்.
குப்பனின் மனைவி ராதா பலத்த காயமடைந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவல் அறிந்த குப்பனின் குடும்பத்தாா், திங்கள்கிழமை இரவு புறப்பட்டு விமானம் மூலம் காஷ்மீா் சென்றுள்ளனா். இறந்த குப்பனின் உடலை மீட்டு விமானம் மூலம் கொண்டு வர ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் அவரது உடல் புதன்கிழமை கொண்டு வரப்படலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.