சென்னை: ஜிஎஸ்டி குறைப்புக்கு நட வடிக்கை எடுத்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலாசீதாராமனுக்கு கோவையில் நவ.11-ம் தேதி பாராட்டு விழா நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப் புத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: நான்கு அடுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்த நிலையில், நாட்டு மக்களுக்கு தீபாவளி பரிசாக, அத்தியாவசிய பொருட்களின் வரிவிதிப்பு மாற்றி அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி, கடந்த ஆக.15-ம் தேதி தனது சுதந்திரதின உரையில் தெரிவித்தார்.
இந்த வரிக் குறைப்பு செப்.22 முதல் அமலுக்கு வருவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். தீவிர வரிக்குறைப்புக்கு நடவடிக்கை எடுத்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கோவையில் நவ.11-ம் தேதி பாராட்டு விழா நடத்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. அதற்கான அழைப்பை டெல்லியில் அவரிடம் அக்.22-ம் தேதி (நேற்று) அளித்தோம்.
ஒரு கோரிக்கை மனுவையும் கொடுத்துள்ளோம். ‘தணிக்கை செய்யப்பட்ட ஜிஎஸ்டி கணக்குகள் மீது மேல் வரிவிதிப்பு, அபராதம் விதிப்பதை தவிர்த்து சமாதானத் திட்டத்தை அறிவிக்க வேண்டும். வணிகர்கள் மீது எடுக்கப்படும் குற்ற நடவடிக்கைகளை, தற்கால வணிக நடைமுறைக்கு ஏற்ப மாற்றி அமைக்க வேண்டும். அரசு பணியாளர்களுக்கு இணையாக வணிகர்களுக்கும் ஓய்வூதியம், குடும்பநல நிதி, காப்பீடு, பேரிடர் வெள்ள நிவாரணம் போன்றவற்றை அமல்படுத்த வேண்டும்.
அரிசி, பருப்பு, எண்ணெய், பால், புளி, மிளகாய், மல்லி போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு முழு வரிவிலக்கு அளிக்க வேண்டும். ரூ.2 ஆயிரத்துக்கும் குறைவான விடுதிகளின் கட்டணத்துக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு அளிக்க வேண்டும்’ என்பது கோரிக்கைகளை அதில் வலியுறுத்தி உள்ளோம்.
இந்த சந்திப்பின்போது, பேர மைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் வெ.கோவிந்தராஜுலு, மாநில தலைமைச் செயலாளர் ஆர்.ராஜ்குமார், மாநில கூடுதல் செயலாளர் எஸ்.ராஜசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர். இவ்வாறு அந்த அறிக்கையில் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.