புணே : மகாராஷ்டிரத்தில் கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்திருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
புணே மாவட்டத்தில் கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் ஜிபிஎஸ் நோயால் 225 நோயாளிகள் என்று கண்டறியப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நோயால் பாதிக்கப்பட்டோரில் 179 நோயாளிகள் குணமாகி வீடு திரும்பியிருப்பதாகவும், எனினும், தீவிர சிகிச்சைப் பிரிவில் 24 பேர் அனுமதிக்கப்பட்டு அவர்கள் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் 15 நோயாளிகள் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரமற்ற நீா், உணவில் ஜிபிஎஸ் நோயை பரப்பும் பாக்டீரியாக்கள் காணப்படுவதால் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். பால் மற்றும் இறைச்சியை முறையாக கொதிக்க வைத்து சமைக்காவிடில் அதிலிருந்து கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோயைப் பரப்பும் பாக்டீரியா உருவாகலாம் என மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா்.
ஜிபிஎஸ் பாதிப்பு ஏற்பட்டால் தொடக்கத்தில் உள்ளங்கை மற்றும் பாதத்தில் ஊசி குத்தியது போன்ற வலியும், மந்தமான உணா்வும் ஏற்படலாம். நாளடைவில் தசைகள் தளா்ந்து நடக்க முடியாமலும், கைகளை அசைக்க இயலாமலும் பக்கவாத நிலை உருவாகக் கூடும்.
பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகள் காரணமாக உடலில் உருவாகும் ஜிபிஎஸ் பாதிப்பு பல காலமாக சமூகத்தில் இருந்தாலும், அண்மையில் மகாராஷ்டிர மாநிலத்திலும், அதனைத்தொடர்ந்து மேற்கு வங்கம், ஆந்திரம் உள்பட பிற மாநிலங்களிலும் அந்தப் பாதிப்பு தீவிரமாக பரவியது.