பட மூலாதாரம், BBC World Service
வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதது தொடர்பான வழக்கில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, அவருடைய தோழி சசிகலா ஆகிய இருவரும் அக்டோபர் 1ஆம் தேதி ஆஜராக வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் இந்த வழக்கு இன்று காலையில் விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தை வருமான வரித்துறையுடன் பேசித் தீர்த்துக்கொள்வதற்காக மனுச் செய்யப்பட்டிருப்பதால், அதன் மீது முடிவுதெரியும்வரை வழக்கை ஒத்திவைக்க வேண்டுமென ஜெயலலிதா தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இன்றைய தினம், இந்த வழக்கில் ஆஜராகாமல் இருப்பதற்கு அனுமதி கோரியும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது வருமான வரித்துறையின் சிறப்பு வழக்கறிஞர் ராமசாமி, வருமான வரித் துறையில் தாக்கல்செய்யப்பட்டிருக்கும் மனு தனியாக பரிசீலிக்கப்பட்டுவந்தாலும், உச்ச நீதிமன்ற ஆணைப்படி இந்த வழக்கையும் தொடர்ந்து நடத்த வேண்டுமெனக் கோரினார்.
இதையடுத்து விசாரணையை மதியத்திற்கு ஒத்திவைப்பதாக நீதிபதி தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.
வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, குற்றம்சாட்டப்பட்டிருக்கும் ஜெயலலிதா, சசிகலா ஆகிய இருவரும் அக்டோபர் 1ஆம் தேதியன்று கண்டிப்பாக நேரில் ஆஜராகி, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 313ன் படி இந்த வழக்கு தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டார்.
வழக்கின் பின்னணி
தமிழக முதல்வர் ஜெயலலிதா 1993-1994 ஆம் ஆண்டில் தனது வருமானம் குறித்த கணக்கை வருமான வரித்துறைக்கு சமர்ப்பிக்கவில்லை என வருமான வரித் துறையால் 1996 ஆம் ஆண்டில் வழக்குத் தொடரப்பட்டது.
அதற்குப் பிறகு 93-94 ஆம் ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல்செய்யவில்லை என சசிகலா மீதும் 1997ல் வருமான வரித்துறை வழக்குத் தொடர்ந்தது. அதேபோல, 91-92, 92-93 ஆகிய ஆண்டுகளில் சசி எண்டர்பிரைசசும் அதன் பங்குதாரர்களான ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோரும் வருமான வரிக்கணக்கைத் தாக்கல்செய்யவில்லை எனக் கூறி, 1997ல் மேலும் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தது வருமானவரித் துறை.
இந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்யவேண்டுமெனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் 2006ல் நிராகரிக்கப்பட்டன. பிறகு, உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் நான்கு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்கும்படி பெருநகர நீதிமன்றத்திற்கு கடந்த ஜனவரி 30 ஆம் தேதியன்று உத்தரவிட்டது. பிறகு இந்த கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டது.
இதற்கிடையில், இந்த விவகாரத்தை சமரசமாகப் பேசித் தீர்ப்பதற்கு வருமான வரித்துறையிடம் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு மனுத்தாக்கல் செய்திருந்தது. சென்னைப் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு, இன்று விசாரணைக்கு வந்தது.