`ஜெயலலிதா விஜய்யைக் கைதுசெய்திருப்பார்; ஸ்டாலின் கரிசனம் காட்டியிருக்கிறார்!' – பி.டி.செல்வகுமார்

Spread the love

தூத்துக்குடியில் த.வெ.க தலைவர்  விஜய்யின் முன்னாள் மேலாளரும், திரைப்படத் தயாரிப்பாளருமான தி.மு.க-வைச் சேர்ந்த பி.டி.செல்வகுமார் தமிழ்ச்சாலையில் உள்ள  பிரஸ்கிளப் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நடிகர் விஜய்க்கும், அவர் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் சுமுகமான உறவு இல்லை. தந்தை சந்திரசேகர்தான் சினிமாவில் விஜய்யின் வளர்ச்சிக்கு முழுக் காரணம், முக்கியக் காரணம். ஆனால், சந்திரசேகருக்கு எந்த இடத்திலும் முக்கியத்துவம் இல்லை. ஜனநாயகன் படப்பிடிப்பு ஆறு மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்டது. சென்சார் பிரச்னையைத் தீர்க்க வேண்டியது படக்குழுதான்.

த.வெ.க விஜய்

 சென்சார் பிரச்னையில் ஒரே ஒரு உறுப்பினருக்கு மட்டுமே மாறுபட்ட கருத்து இருந்திருக்கிறது. இதனை படக்குழுதான் சரி செய்திருக்க வேண்டும். மாநில அரசுக்கும், சென்சாருக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?  தி.மு.க, பா.ஜ.க யாரும் படம்  வெளியிடுவதை தடுக்கவில்லை. ஆர்.கே.செல்வமணியின் விஸ்வரூபம் போன்ற பல படங்கள் சென்சார் பிரச்னையால் ரிலீஸ் பண்ண முடியாமல் இருந்துள்ளது. அதே போன்றுதான் ஜனநாயகன் படமும்.  இந்த பிரச்னையை தீர்த்த பின்புதான் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்திருக்க வேண்டும். உங்கள் கடமையிலிருந்து நீங்கள் தவறி விட்டு பிறர் மேல் பழி போடுவது தவறு.

ஒரு படம் வெற்றி பெற்றால், புகழ் வந்தால், கைதட்டல் வந்தால், ரசிகர்கள் விசில் அடித்தால் எல்லாப்  புகழும் உங்களுக்கு. ஆனால், பிரச்னை என்று வந்தால் மட்டும் நீங்கள் காரணம் இல்லையா? இதுதொடர்பான பிரச்னையை சரி செய்ய வேண்டியது யார்? சென்சார் வரவில்லை என்றவுடன் மத்தியரசுதான் பிரச்னை என்று கூறுகிறீர்கள். முழுக்க, முழுக்க இது விஜய்யின் தவறுதான். கரூரில் மாநாடு போட வேண்டும் என்று கேட்டது யார்? அப்பாவி மக்களைப் பற்றி அவர் சிந்திக்கவில்லை. 41 பேர் இறந்ததற்கு விஜய்தான் பொறுப்பு. ஜெயலலிதா இருந்திருந்தால் தற்போது விஜய்யை கைது செய்து இருப்பார்.

விஜய்

ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலின் விஜய் மீது கரிசனம் காட்டி இருக்கிறார். அ.தி.மு.க, பா.ஜ.கவினர்  கரூரில் நடந்த சம்பவத்திற்கு அப்போது விஜய்க்கு ஆதரவாகப் பேசினார்கள். தற்போது விஜய் தங்கள் கூட்டணிக்கு வரவில்லை என்றவுடன் எதிராகப் பேசி ஒரு சுயநல அரசியலை செய்து வருகிறார்கள். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்த போது அங்கு சென்ற விஜய், ஏன் மதுரை மாநாட்டில் இறந்தவர் வீட்டிற்கு செல்லவில்லை?  பப்ளிசிட்டி வேண்டும் என்றால் எங்கு வேண்டுமானலும் விஜய் செல்வார். வரும் சட்டமன்றத் தோ்தலில் தி.மு.க கூட்டணி மகத்தான வெற்றி பெறும். விஜய், திரைப்படத்தில் பேசும் பஞ்ச் டயலாக் அரசியலில் எடுபடாது.” என்றார்.  

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *