இலங்கையைச் சேர்ந்தவர் லட்சுமணன் மேரி பிரான்சிஸ்கா, 2019ல், சுற்றுலா விசாவில் இவர் தமிழ்நாடு வந்தார். சென்னை அண்ணா நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த இவர், 2021ல், விமானத்தில் சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல முயன்றார். அப்போது அவரை, தமிழக கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் தங்கி உள்ள விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த உமா காந்தன் வகுத்து தந்த திட்டத்தின்படி, லட்சுமணன் மேரி பிரான்சிஸ்கா, மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் இறந்து போன ஒருவரது வங்கி கணக்கில் இருந்து, தங்கள் அமைப்புக்கு, 42.28 கோடி ரூபாயை மாற்ற முயன்றது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, லட்சுமணன் மேரி பிரான்சிஸ்கா கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். லட்சுமணன் மேரி பிரான்சிஸ்கா சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக, அமலாக்கத் துறை அதிகாரிகளும் வழக்குப் பதிவு செய்து உள்ளது.
அவரிடம் பறிமுதல் செய்த ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, லட்சுமணன் மேரி பிரான்சிஸ்காவுக்கு தமிழகத்தில் வாக்குரிமை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் கடிதம் எழுதி இருந்தனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் தற்போது வினியோகம் செய்யப்படும் SIR சீரமைப்பு பணியில் லட்சுமணன் மேரி பிரான்சிஸ்காவுக்கு படிவம் அச்சடித்து இருப்பதும் தெரியவந்துள்ளது.
இதனிடையே விசாரணை மேற்கொண்ட அமலாக்கத்துறை, லட்சுமணன் மேரி பிரான்சிஸ்காவிடம், ஓட்டுநர் உரிமம், நம் நாட்டு பாஸ்போர்ட், ஆதார் கார்டு என, சகல விதமான ஆவணங்களும் உள்ளன. அனைத்தையும் ரத்து செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
