டிஜிட்டல் கரன்சியாக மாறிய ரூ.4.5 கோடி; ஹைட்ரோபோனிக்கஞ்சா, போதைப்பொருள் தயாரித்த எம்.பி.ஏ.பட்டதாரிகள் | Rs. 4.5 crore transformed into digital currency: MBA graduates produced hydroponic marijuana and drugs-

Spread the love

புனே ஹின்சேவாடி என்ற இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஹைட்ரோபோனிக் முறையில் கஞ்சா வளர்க்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு போலீஸார் ரெய்டு நடத்தி போதைப்பொருள் தயாரித்தவர்களைக் கைது செய்தனர்.

ஹைட்ரோபோனிக் கஞ்சா உற்பத்தி செய்த இரண்டு பேரும் எம்.பி.ஏ. பட்டதாரிகள் ஆவர். இரண்டு பேரும் படித்துவிட்டு வேலையில் இருந்தனர். ஆனால் அவர்கள் தங்களது வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஹைட்ரோபோனிக் முறையில் கஞ்சா வளர்த்துள்ளனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தி மும்பையைச் சேர்ந்த ஒரு எஞ்சினியரிங் கல்லூரி மாணவர் மற்றும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.3.5 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

கிரிப்டோகரன்சி

கிரிப்டோகரன்சி

அவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் போதைப்பொருள் விற்பனை மற்றும் வர்த்தகத்திற்கு கிரிப்டோகரன்சி, டார்க் வெப், சோசியல் மீடியாவைப் பயன்படுத்துவது தெரிய வந்தது.

இது குறித்து புனே துணை போலீஸ் கமிஷனர் முண்டே கூறுகையில், “‘கைது செய்யப்பட்டவர்கள் கிரிப்டோகரன்சி முறையைப் பயன்படுத்தக்கூடும் என்று எங்களுக்குச் சந்தேகம் வந்தது. உடனே அவர்களது சோசியல் மீடியா உட்பட அனைத்து வகையான டிஜிட்டல் கணக்குகளையும் ஆய்வு செய்தோம். அவர்கள் போதைப்பொருள் வர்த்தகத்தில் கிடைத்த பணத்தை கிரிப்டோகரன்சியாக மாற்றி வைத்திருந்தனர் என்பது தெரியவந்தது. அவர்கள் 25 கிரிப்டோ கணக்குகளில் ரூ.4.5 கோடியைப் போட்டு வைத்திருந்தனர்.

அந்தக் கிரிப்டோகரன்சி கணக்குகளை முடக்கவும், எப்படி அவர்கள் எந்த வங்கிக்கணக்கு மூலம் பணத்தை இது போன்று கிரிப்டோகரன்சியாக மாற்றினர் என்பதைத் தெரிந்து கொள்ள மத்திய நிதி புலனாய்வுத்துறையின் உதவி கோரப்பட்டுள்ளது” என்றார்.

போதைப்பொருள் தயாரிக்கத் தேவையான பொருட்களை பூட்டானைச் சேர்ந்த ஒருவர் எல்.இ.டி பல்ப் மூலம் அனுப்பி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தப் பல்ப் வந்த பார்சல் கிடைத்துள்ளது. அதிலுள்ள முகவரியின் அடிப்படையில் பூட்டானைச் சேர்ந்த நபரைக் கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தாய்லாந்தைச் சேர்ந்த ஒருவருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து இருநாட்டு போலீஸாரின் உதவியை நாடி இருப்பதாக புனே போலீஸார் தெரிவித்தனர். தாய்லாந்தில் இருந்து போதைப்பொருள் முதலில் பூட்டான் வருகிறது. அங்கிருந்து புனே வந்திருப்பது தெரிய வந்துள்ளது. போதைப்பொருள் வாங்கவும் விற்கவும் கிரிப்டோகரன்சியைப் பயன்படுத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *