வங்கக் கடலில் இலங்கைக்கு அருகே உருவாகியிருக்கும் `டிட்வா” (Cyclone Ditwah) புயல் நவம்பர் 30-ம் தேதி அதிகாலை புதுச்சேரிக்கும், ஆந்திராவுக்கும் இடையே கரையை கடக்க இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
அதையடுத்து புதுச்சேரிக்கு `ரெட் அலர்ட்’ கொடுத்திருக்கும் வானிலை மையம், நாளையும் நாளை மறுதினமும் (நவம்பர் 29,30) அதிக கனமழை பெய்யும் என்று எச்சரித்திருக்கிறது.
அதன் தொடர்ச்சியாக புதுச்சேரி துறைமுகத்தில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டிருக்கும் நிலையில், இரண்டு தேசிய பேரிடர் மீட்புக் குழு வருகை தந்திருக்கின்றன.

இது தொடர்பாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியரும், பேரிடர் மேலாண்மை துறை ஆணையருமான குலோத்துங்கன் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய ஆட்சியர் குலோத்துங்கன், “முக்கியத் துறைகளில் கட்டுப்பாட்டு அறை அமைக்க வேண்டும். அது 24 மணி நேரமும் இயங்க வேண்டும். பொதுமக்கள் கேட்கும் அனைத்து உதவிகளுக்கும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும், நகரம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வாய்க்கால்களிலும் இருக்கும் அடைப்புகளை வெள்ளிக்கிழமைக்குள் நீக்க வேண்டும். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.