Zomato (சோமேட்டோ), Swiggy (ஸ்விக்கி) உள்ளிட்ட நிறுவனங்களின் டெலிவரி ஊழியர்கள், குறைவான ஊதியம், அதிக வேலைப்பளு, பாதுகாப்பு இல்லாமை மற்றும் மரியாதையின்மை போன்ற பல்வேறு கோரிக்கைகளுக்காக டிசம்பர் 31, 2025 அன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மத்திய அரசு, கிக் மற்றும் பிளாட்ஃபார்ம் ஊழியர்களுக்குப் புதிய சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின் சில திட்டங்களை அறிவித்திருக்கிறது.
அதன் அடிப்படையில் ஸ்விக்கி, ஜொமாட்டோ, உபர், ஓலா போன்ற தளங்களில் கிக் வேலை செய்பவர்களுக்குப் பலனளிக்கும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இந்தத் திட்டத்தில் பலன்பெற ஊழியர் ஒரு நிதியாண்டில் ஒரு நிறுவனத்துடன் குறைந்தது 90 நாட்கள் வேலை செய்திருக்க வேண்டும். பல நிறுவனங்களுடன் வேலை செய்தால் 120 நாட்கள் வேலை செய்திருக்க வேண்டும்.
அதாவது ஒரே நாளில் மூன்று நிறுவனங்களுக்கு வேலை செய்தால், அது மூன்று நாட்களாகக் கணக்கிடப்படும். வருமானம் வந்த நாளிலிருந்து வேலை நாளாகக் கணக்கிடப்படும்.