சட்டமன்ற தேர்தல் பரபரப்புகளால் அரசியல் களம் சூடாகியுள்ளது. மதுராந்தகம் பொதுக்கூட்டத்தை நடத்தி தெம்புடன் இருந்த தேசிய ஜனநாயக கூட்டணியில், அண்ணாமலை 6 தொகுதிகளுக்கான பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகியிருப்பது மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தந்தை உடல்நலம் காரணமாக பயணம் செய்ய முடியாது. பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக சொன்ன அண்ணாமலை, தேர்தலில் போட்டியிடுவதும் சந்தேகம் என்று அறிவித்துள்ளார். அவரின் முடிவுக்கு என்ன காரணம்?
4 சுவருக்குள் முடிந்திருக்க வேண்டிய விவகாரம்!
பாஜக நிர்வாகிகளிடம் பேசியபோது, நேற்றைய செய்தியாளர் சந்திப்பு பட்ஜெட் பற்றியது. அதில் பட்ஜெட் தான் முதன்மையாக இருக்க வேண்டும். நீண்ட நேரம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், “நீங்கள் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடுவதாக கூறப்படுகிறதே’ என்று கேட்டனர்.
அதற்கு தான் அண்ணாமலை, 6 தொகுதிகளின் பொறுப்பாளர் பணியில் இருந்து விலகுவதாக கூறினார். அந்தக் கேள்விக்கும், அவரின் பதிலுக்கும் சம்பந்தமே இல்லை. கடந்த 2 ஆண்டுகளாக அண்ணாமலையின் தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை ஏற்பட்டு வருவது உண்மை.