டெல்லியில் சர்வதேச ஏ.ஐ. மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ஐ.டி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் கடைகளை அமைத்து அதில் தங்களது தயாரிப்புகளை கண்காட்சிக்கு வைத்துள்ளன.
இதில் கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த கால்கோட்டியாஸ் பல்கலைக்கழகமும் ஒரு கடையைத் திறந்து அதில் தங்களது தயாரிப்பு எனக் கூறி சிலவற்றை காட்சிக்கு வைத்திருந்தது.
இதில் ரோபோ நாய் ஒன்றும் இருந்தது. இது குறித்து பல்கலைக்கழகத்தின் தகவல் தொடர்புத் துறை பேராசிரியர் நேஹா சிங் தூர்தர்சனுக்கு அளித்த பேட்டியில், “”ஓரியன்’ என்று பெயரிடப்பட்ட அந்த ரோபோ நாய் பல்கலைக்கழகத்தின் சிறப்பு மையத்தால் (Centre of Excellence) உருவாக்கப்பட்டது. இந்த ரோபோ மிகவும் “குறும்புத்தனம்” (naughty) மிக்கது. கண்காணிப்புப் பணிகளைத் திறம்படச் செய்யும்” என்று விவரித்தார்.
மேலும், ”செயற்கை நுண்ணறிவுத் துறையில் (AI) 350 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்யும் முதல் தனியார் பல்கலைக்கழகம் நாங்கள்தான்” என்று அவர் குறிப்பிட்டார்.

ஆனால் அந்த ரோபோ நாயைப் பார்த்த பலரும் இது சீன தயாரிப்பு என்பதைக் கண்டுபிடித்தனர். சமூக வலைத்தளப் பயனர்கள் அந்த ரோபோ நாய், சீனாவின் யூனிட்ரீ ரோபோடிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட Unitree Go2 என்ற வணிகரீதியிலான தயாரிக்கப்பட்ட ரோபோ நாய் என்பதைக் கண்டுபிடித்தனர்.
இது தொடர்பாக சமூக வலைத்தளப் பயனர்கள் சமூக வலைத்தளத்தில் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்தனர்.
சீனாவின் தயாரிப்பான அந்த ரோபோ நாய் பொதுவாக ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறையில் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இதையடுத்து மாநாட்டு அமைப்பாளர்கள் உடனே சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தின் ஸ்டாலை அகற்றும்படி உத்தரவிட்டனர்.