அஸ்வின் திடீரென ஓய்வு அறிவிக்க அவமானம் ஒரு காரணமாக இருக்கலாம் என்று அஸ்வின் தந்தை கூறியதற்கு அஸ்வின் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அஸ்வினின் திடீர் ஓய்வு குறித்து, அவரது தந்தை அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளது. இதனையடுத்து, அவரது தந்தையின் பேச்சுக்கு விளக்கமளித்து, அஸ்வின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அஸ்வின் எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “ஊடகங்களின் முன்னிலையில் எப்படி பேசுவது என்று அவருக்கு தெரியாது. டேய் ஃபாதர் (தகப்பா) என்னடா இதெல்லாம். எனது தந்தை கூறியதை பெரிதுபடுத்தாதீர்கள். எனது ஓய்வு குறித்து என் தந்தை கூறிய கருத்துக்களை ஏற்க வேண்டாம். அவரை மன்னித்து விட்டுவிடுங்கள் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
My dad isn’t media trained, dey father enna da ithelaam .
I never thought you would follow this rich tradition of “dad statements” .
Request you all to forgive him and leave him alone https://t.co/Y1GFEwJsVc
— Ashwin (@ashwinravi99) December 19, 2024
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அனைத்துவிதமான சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக நேற்று(டிச.18) அறிவித்தார்.
இதுகுறித்து, அவரது தந்தை ரவிச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “இந்திய அணியில் அஸ்வினுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அவருக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டு அவர் அவமானப்படுத்தப்பட்டார்.
டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடியிருந்தும், அணியில் இடம் கிடைக்காததால் அஸ்வின் ஓய்வு முடிவை எடுத்திருக்கலாம். திடீரென ஓய்வு அறிவித்ததன் காரணம், அவமானமாகக்கூட இருக்கலாம். கிரிக்கெட் விளையாட்டின் உச்சத்தில் இருக்கும் ஒருவர், அவமானப்பட்டதால் ஓய்வை அறிவித்திருக்கலாம்.
போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது என்பது அவரது தனிப்பட்ட முடிவு; அதில் தலையிட முடியாது. அஸ்வின் ஓய்வு அறிவிக்கப்போவது எனக்கும் கடைசி நிமிடத்தில்தான் தெரியவந்தது. அவர் மனதில் என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும், நான் அதை முழு மனதோடு ஏற்றுக்கொள்கிறேன்.’’ என அஸ்வினின் தந்தை ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
இதையும் படிக்க: தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கவில்லை: அஸ்வின் தந்தை குற்றச்சாட்டு!