தவெக தலைவர் விஜய்க்கு வேறு ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு இறுதியில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்தச் சூழலில், விஜய் வசித்து வரும் சென்னை நீலாங்கரை வீட்டிற்குள் தன்னை அனுமதிக்க அவர் மறுப்பதாகச் சங்கீதா பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாகச் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அவர் முறையீடு செய்துள்ளார்.
சங்கீதா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, “விஜயை திருமணம் செய்து 26 வருடங்கள் குடும்பம் நடத்தி இரண்டு குழந்தைகள் பெற்று வளர்த்துள்ளேன்; திருமணத்திற்கு பிறகு பல வருடங்கள் விஜயை மிகவும் சிறப்பாக கவனித்துக் கொண்டேன். நான் பிரிட்டன் குடியுரிமை பெற்று லண்டனில் வசித்து வருவதால், சென்னையில் எனக்குத் தனியாக வீடு இல்லை. விஜய் வசித்து வரும் நீலாங்கரை வீட்டில் எனக்கும் சரிபாதி உரிமை உள்ளது. எனவே, விவாகரத்து வழக்கு முடியும் வரை அல்லது நான் வேறு வீட்டிற்குச் செல்லும் வரை நீலாங்கரை வீட்டிலேயே தங்குவதற்கு என்னை அனுமதிக்க வேண்டும்” என்று கோரியுள்ளார்.
தொடர்ந்து தனது மனுவில், திரைப்படங்களில் நடித்துக் கோடி கோடியாகச் சம்பாதிக்கும் விஜய், தனக்கும் தனது குழந்தைகளுக்கும் சேர வேண்டிய நியாயமான பங்கை வழங்க வேண்டும் என்றும் சங்கீதா வலியுறுத்தியுள்ளார். மேலும், தன்னை நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதிக்குமாறு விஜய்க்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
விஜய் அரசியல் களத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த இந்தச் செய்தி தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் விவாதப் பொருளாகியுள்ளது. சங்கீதாவின் இந்தக் கோரிக்கை குறித்து நீதிமன்றம் எடுக்கப்போகும் முடிவு என்ன என்பது வரும் நாட்களில் தெரியவரும்.
