இது குறித்து விபரம் அறிந்த தரப்பில் பேசினோம், `தஞ்சாவூர் தொகுதியில் திமுக-வில் போட்டியிடுவதற்கு அக்கட்சி நிர்வாகிகள் பலரும் முட்டி மோதி வருகின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவில் போட்டியிட்ட டி.கே.ஜி. நீலமேகம் கிட்டதட்ட 45,000 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் அறிவுடைநம்பியை வீழ்த்தினார். இந்த முறை அதிமுக-வில் என்.எஸ்.சரவணன் தான் வேட்பாளர் என்பது உறுதியாகி விட்டது என்கிறார்கள்.
சரவணனும் தொகுதிக்குள் வலம் வருவதுடன் சத்தமில்லாமல் பிரச்சாரமும் செய்து வருகிறார். தஞ்சாவூர், திமுக-விற்கு சாதகமான தொகுதி என பேசப்படுவதால் முன்கூட்டியே திட்டமிட்டு பணிகளை செய்தால் தேர்தல் நெருங்கும் சமயத்தில் எதிர் கொள்வதற்கு எளிதாக இருக்கும் என்று தொகுதிக்குள் பம்பரமாக சுழல்கிறார்.
தஞ்சாவூர் தொகுதியை திமுக-வின் கோட்டை என்கிறார்கள், அந்த கோட்டையில் 2011, 2016 ஆகிய தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றது. அதையே தனக்கான பாசிட்டிவ் பாயிண்டாக எடுத்து கொண்டு களம் காண காத்திருக்கிறார் அதிமுக சரவணன்.
திமுக-வை பொறுத்தவரை மேயர் சண்.இராமநாதன், நடிகர் துரை.சுதாகர், சிட்டிங் எம்.எல்.ஏ டி.கே.ஜி.நீலமேகம், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, செந்தமிழ்செல்வன் உள்ளிட்ட பெரிய பட்டாளமே ரேஸில் உள்ளது. தொடக்கத்தில் இருந்தே மேயர் சண்.இராமநாதன் பெயர் பலமாக அடிப்பட்டது. தன்னுடைய வீட்டின் மாடியில் கட்சிக்கான அலுவலகம் ஒன்றை அமைத்துள்ளார். அந்த அறையின் சுவற்றில் கருங்கல்லால் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உருவத்தை செதுக்கி பொருத்தியுள்ளார்.