தஞ்சாவூர், அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன். இவர் தஞ்சாவூர் மாநகராட்சியில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றினார். இவரின் மனைவி செல்வி. இவர்களுக்கு, தஞ்சாவூர் மாநகராட்சியில் உதவி பொறியாளராகப் பணியாற்றிய கார்த்திகேயனுடன் பழக்கம் ஏற்பட்டது.
கார்த்திகேயன் தஞ்சாவூர் மாநகராட்சியில் அதிகாரம் மிக்கவராக வலம் வந்தார். ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் இவர் கண்ணசைவு படியே நடந்ததாகச் சொல்வார்கள். ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணியில் நடந்த பல முறைகேடுகளுக்கு கார்த்திகேயன்தான் மூளையாக இருந்தார் என்கிற குற்றச்சாட்டும் கிளம்பியது.

இந்நிலையில், கார்த்திகேயன், கடந்த 2021ம் ஆண்டு மணிமாறனிடமும் அவரின் மனைவி செல்வியிடமும், அவர்களின் மகன் மற்றும் மகளுக்கு மாநகராட்சியில் நிரந்தர அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி பணம் கேட்டுள்ளார்.
இதை நம்பிய மணிமாறனும் அவரின் மனைவி செல்வியும், கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் 2025ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி வரை, கார்த்திகேயனின் மகள் சுவேதா வங்கிக் கணக்கின் மூலம் ரூ.42 லட்சம் கொடுத்துள்ளனர். ஆனால், சொன்னபடி கார்த்திகேயன் வேலை வாங்கித் தராமல் இழுத்தடித்துள்ளார்.
இதற்கிடையே கார்த்திகேயன் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததால் பண்ருட்டி நகராட்சியில் உதவி பொறியாளராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். “‘எப்ப வேலை வாங்கிக் கொடுப்பீங்க?” என்று செல்வி பலமுறை கார்த்திகேயனிடம் கேட்டும் முறையான பதில் அளிக்கவில்லை.