ஆனால், மைதானத்தின் உரிமையாளரான “கிரேட்டர் கொச்சின் மேம்பாட்டு ஆணையத்தின்’ (GCDA) பாதுகாப்பு ஊழியர்கள், அவர்களை வாசலிலேயே, “மைதானத்துக்கு வாடகைபாக்கி இருக்கிறது. அதனால் உள்ளே அனுமதிக்கமாட்டோம்” எனத் தடுத்து நிறுத்தினர்.
செய்தியாளர் சந்திப்புக்கு வந்த பத்திரிகையாளர்களும் உள்ளே அனுமதிக்கப்படாததால், காலித் ஜமீல் நீண்ட நேரம் காத்திருந்துவிட்டு அங்கிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய கேரள கால்பந்து சங்கத்தின் (KFA) தலைவர் நவாஸ் மீரான், “இது ஒரு சிறிய தொழில்நுட்பக் கோளாறு பிரச்னை. ஆசியக் கோப்பை தகுதிச் சுற்று திட்டமிட்டபடி நடக்கும். விரைவில் சிக்கல்கள் சரிசெய்யப்படும்” என்றார்.
இதுபோன்ற சம்பவம் நடப்பது இது முதல் முறையல்ல. கடந்த பிப்ரவரி மாதம் இதே மைதானத்தில் கேரள பிளாஸ்டர்ஸ் அணிக்கும் இதே போன்ற வாடகைப் பிரச்சனையால் அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மைதானத்தின் உரிமையாளரான GCDA மற்றும் போட்டிகளை நடத்தும் KFA ஆகிய இரு அமைப்புகளுக்கும் இடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாததே இதுபோன்ற குளறுபடிகளுக்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. இந்திய கால்பந்தில் இது போன்ற கசப்பான சம்பவங்கள் தொடர்வது விளையாட்டு ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.