திரிஷா கிருஷ்ணன் சார்பில் அவரது வழக்கறிஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எனது கட்சிக்காரரும், பிரபல இந்தியத் திரைப்பட நடிகையுமான செல்வி. திரிஷா கிருஷ்ணன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, பின்வரும் விபரங்களைப்பதிவு செய்ய இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்:
ஊடகங்களில் எனது கட்சிக்காரரைப் பற்றிப் பரவி வரும் அருவருப்பான கருத்து தொடர்பாக இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது.மாநில அரசியலில் உயரிய பதவியில் இருக்கும் ஒரு நபர், இவ்வளவு தரம் தாழ்ந்த மற்றும் பொருத்தமற்ற கருத்தைத் தெரிவிப்பார் என்று எனது கட்சிக்காரர் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.
எனது கட்சிக்காரர் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் தொடர்பு உடையவர் அல்ல என்பதையும், எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் எண்ணம் அவருக்கு இல்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறார். மேலும், கடந்த காலங்களில் அவர் கூறிவந்தது போலவே, அரசியலில் எப்போதும் அவர் நடுநிலைப்பாட்டையே கடைபிடிக்கிறார்.
எனது கட்சிக்காரர் தனது கலைப் பணியால் மட்டுமே அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறார்; எந்தவிதமான அரசியல் சார்புடனும் தன்னை இணைத்துப் பார்ப்பதை அவர் விரும்பவில்லை. மிக முக்கியமாக, ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கை பொதுவெளியில் விவாதப் பொருளாக ஆக்கப்படக்கூடாது என்பது பொதுவான கருத்தாகும்.
உயரிய பொறுப்பில் இருப்பவர்கள் பொது மேடைகளில் பேசும்போது பொறுப்புடனும், நிதானத்துடனும் நடந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனது கட்சிக்காரருக்குத் தொடர்பில்லாத விவகாரங்களில், அவருடைய பெயரை இழுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
