தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை இழந்த விவசாயி தற்கொலை!

Dinamani2f2024 072f3e7209f3 Ca0e 4986 81ab C5f87de3232c2fsuicide.jpg
Spread the love

பேராவூரணி: பேராவூரணி அருகே தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த விவசாயிக்கு பணம் திரும்ப கிடைக்காததால் விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகேயுள்ள புனல்வாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பெலிக்ஸ் ராஜா (41). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றிய தேவகோட்டையை சேர்ந்த சார்லஸ், காரைக்குடி நாகரத்தினம், கோவை பாலசுப்பிரமணியன் ஆகியோர் மூலம் கடந்த 2019 ஆம் ஆண்டு ரூ.10 லட்சம் முதலீடு செய்தார்.

இந்த நிறுவனத்தில் செய்யப்படும் முதலீடுகளுக்கு 24 சதவீத வட்டி வழங்கப்படும், 30 மாதங்களில் முதலீடு செய்யப்பட்ட தொகை இரட்டிப்பாக வழங்கப்படும் என கவர்ச்சிகரமான அறிவிப்புகளை இந்நிறுவனம் வெளியிட்டு இருந்தது.

நிறுவனத்தின் இந்த அறிவிப்பினை நம்பி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நடுத்தர மக்கள் ஆங்காங்கே துவங்கப்பட்ட கிளைகளில் பெருந்தொகையினை முதலீடு செய்தனர். ஆனால் நிறுவனம் தனது முதலீட்டாளர்களுக்கு கூறியபடி தொகையினை வழங்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் பேரில் 2023 ஆம் ஆண்டு மதுரை பொருளாதார குற்றப்பிரிவு தடுப்பு போலீசார் தனியார் நிதி நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்து சுமார் ரூ.22 கோடி மதிப்பிலான சொத்துக்கள், ஆவணங்கள் மற்றும் ரொக்கம் உள்ளிட்டவற்றை கைப்பற்றி அதன் இயக்குநர்கள் 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பெலிக்ஸ் ராஜாவுக்கு நிறுவனம் கூறியபடி வட்டி கொடுக்காததால் தனது உறவினர் ஒருவர் மூலம் நிறுவனத்தை அணுகி முதலீடு செய்த பணத்தை திரும்ப கேட்டதற்கு, நிறுவனத்தின் அடியாள்கள் அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது.

தனது சேமிப்பும், நிலத்தை விற்று முதலீடு செய்த பணமும் போய்விட்டதே என்ற விரக்தியில் கடந்த 26 ஆம்தேதி விஷம் குடித்த பெலிக்ஸ் ராஜா உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி 30 ஆம் தேதி பரிதாபமாக பலியானார்.

இது குறித்து பெலிக்ஸ் ராஜாவின் மனைவி மார்க்ரேட் ரோஸ்லின் மேரி(34) தனது கணவர் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும், மோசடி செய்த பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும் என திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் பாஸ்கர் உத்தரவின் பேரில் திருச்சிற்றம்பலம் ஆய்வாளர் சேரன் மற்றும் போலீஸார் தேவகோட்டையை சேர்ந்த சார்லஸ் , காரைக்குடி நாகரத்தினம், கோவை பாலசுப்பிரமணியன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர் .

மேலும் புனல்வாசல் கிராமத்தில் பலர் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு தனியார் நிதி நிறுவனங்களில் பணம் கட்டி ஏமாற்றப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *