மண்டப இடிப்பு சம்பவம்
அதற்கு காரணங்களும் இருந்தது. வாஜ்பாயின் அமைச்சரவையில் டி.ஆர்.பாலு நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த போது கோயம்பேட்டில் பாலம் கட்டுவதற்காக விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் மண்டபத்தின் பெரும் பகுதியை இடித்தனர். அதற்கு எதிராக வழக்கெல்லாம் தொடர்ந்து ஓய்ந்துப் போனார் விஜயகாந்த். 2005 இல் தேமுதிக உதயமாவதற்கு இந்த மண்டப இடிப்பு சம்பவம் முக்கிய காரணமாக அமைந்தது.
`திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளும் இத்தனை ஆண்டுகளாக என்ன செய்தன? ‘அவர்களுக்கு மாற்று தேமுதிகதான். நான் வந்தால் வறுமையை ஒழித்து விடுவேன்’ என்பதை பிரதானமாக முன்வைத்தார் விஜயகாந்த். விஜய் மீது இப்போது வைக்கப்படும் விமர்சனங்களை போலவே விஜயகாந்த் மீதும் ‘சினிமாக்காரர்’ ‘கூத்தாடி’ போன்ற விமர்சனங்கள் வைக்கப்பட்டது.
‘நம்ம ஊருக்கெல்லாம் கூத்தாட வெளியூர்ல இருந்து வருவாங்க. கூத்து முடிய லேட்டாகும். கடைசி பஸ்ஸ விட்ருவாங்க. அதனால ஊர்ல தங்கிட்டு மறுநாள் கிளம்பிப் போவாங்க. கூத்தாடிங்க நிரந்தரமானவனங்க இல்லை. பிரசாரத்துக்கு வந்தா எலெக்சன் வரைக்கும் மட்டும் தங்க இடம் கொடுங்க. அதை விட்டுட்டு 5 வருசமும் கூத்தாடிய ஊருக்குள்ளயே தங்க வைக்கலாம்னு நினைக்காதீங்க’ என விஜயகாந்துக்கு எதிராக விருத்தாச்சலத்தில் கடுமையாக கம்பு சுற்றினார் ராமதாஸ்.

எதுவும் எடுபடவில்லை. விஜயகாந்தின் யதார்த்தமான பேச்சும் ஏழை பங்காளனாக அவர் முன்னெடுத்த பிரசாரமும் விருத்தாச்சலத்திலிருந்து அவரை சட்டமன்றத்துக்கு அனுப்பியது. 2006 தேர்தலில் 232 தொகுதிகளில் போட்டியிட்டது தேமுதிக. விஜயகாந்த் மட்டும்தான் வென்றார்.
ஆனால், தேமுதிகவின் வாக்கு வங்கி ஆச்சர்யப்படுத்தியது. முதல் தேர்தலிலேயே 8.3% வாக்குகளை வாங்கியது. மாநிலக் கட்சி அந்தஸ்து கிடைத்தது. இதன்பிறகுதான் திமுகவும் அதிமுகவும் விஜயகாந்தை ஒரு ஆபத்தாக பார்க்க நினைத்தனர். இரண்டு தரப்புமே விஜயகாந்துக்கு கொக்கி போட்டு இழுக்கவும் முற்பட்டனர்.
எதிலும் சிக்காத விஜயகாந்துக்கும் தேமுதிகவுக்கும் அடுத்தடுத்து எல்லாமே புலிப்பாய்ச்சல்தான். அழகிரி முன் நின்று நடத்திய திருமங்கலம் (ஃபார்முலா) இடைத்தேர்தலில் தேமுதிக 13,000 வாக்குகளை அள்ளியது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் தேமுதிக தனித்தே நின்றது.
இந்த முறை வாக்கு சதவீதம் இன்னும் கூடியது. 10.1% வாக்குகளை பெற்ற தேமுதிக 35 தொகுதிகளில் 50,000+ வாக்குகளைப் பெற்றது. மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமெனில் விஜயகாந்தின் தயவு கட்டாயம் வேண்டுமென ஜெ இப்போதுதான் முடிவுக்கு வருகிறார்.