தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக திருமாவளவனை மாற்றிய முதல் தேர்தல் வெற்றி! | முதல் களம் 09 | VCK Thirumavalavan first slection Victory in TN assembly

Spread the love

தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத சக்தி

அந்த முதல் சிறிய வெற்றியிலிருந்து இன்று விசிக ஒரு மாபெரும் சக்தியாக வளர்ந்திருக்கிறது. தமிழ்நாட்டில், தலித் சமூகத்தை அரசியல் கட்சிகள் எப்போதும் “இலக்காக” வைத்தே வந்திருக்கின்றன. திமுகவும் இடதுசாரிக் கட்சிகளும் கூட பல காலமாக தலித் மக்களை மையப்படுத்தி பேசி வந்துள்ளபோதிலும், தலித் சமூகம்  ஒரு ஒற்றைப் பெரும் அரசியல் சக்தியாக உருவாகாமலேயே இருந்துவந்தது. அந்த நிலையை ஓரளவு மாற்றி உள்ளார் திருமாவளவன்.

2024 தேர்தலில் இரண்டு நாடாளுமன்ற இடங்களை தனது ‘பானை’ சின்னத்தில் வென்ற பிறகு, தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற கட்சியாக உருவெடுத்துள்ளது விசிக. அதே சமயம், தலித் அரசியலோடு நின்றுவிடாமல், சமூக நீதி, சிறுபான்மையினர் உரிமை, தமிழ் உணர்வு, இலங்கைத் தமிழர் பிரச்னை என பல்வேறு தளங்களில் திருமாவளவன் குரல் ஒலிக்கிறது. 

“சமூகத்தை ஒன்றுபடுத்துவது சாதியால் அல்ல, கொள்கையால்தான் முடியும். சாதி அடிப்படையில் ஒருபோதும் நாங்கள் முயல மாட்டோம். எங்கள் அரசியல் பேச்சை ஏற்றுக்கொள்பவர்கள் எங்களோடு இருப்பார்கள். தோற்றாலும் சரி, இதைத்தான் நாங்கள் எதிர்கொள்ளப் போகிறோம்” என்கிறார் திருமாவளவன்.

அவரது இந்த நிலைப்பாடு காரணமாகவே, தமிழ்நாட்டின் கூட்டணி அரசியலில் இன்று  அவரது கட்சி தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது. அந்த வகையில், ஒடுக்கப்பட்டோரின் குரலாக மட்டுமல்லாது, சமத்துவத்தையும் நீதியையும் வலியுறுத்தும் தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் முகமாகவும் அவர் உயர்ந்திருக்கிறார்.

தொல்.திருமாவளவன்

தொல்.திருமாவளவன்

திமுகவுக்கு பக்கபலம்

இந்த நிலையில், தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின்  வருகை, திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கான தேவையையும் மதிப்பையும் மேலும் உயர்த்தியிருக்கிறது. அதிமுக தொடர்ந்து பிளவுண்டு கிடக்கிறது. பாஜகவுக்கு கூட்டணி இல்லாமல், தமிழ்நாட்டில் காலூன்றுவதே சிரமமாக உள்ளது. இந்தச் சூழலில் வட மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு கொண்ட விசிக, திமுக கூட்டணிக்கான சித்தாந்த வலிமையையும் சமூகப் பன்முகத்தன்மையையும் ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில், திமுக ஆட்சியைப் பிடித்ததற்கும், 2024 நாடாளுமன்ற தேர்தலில், திமுக கூட்டணிக்கு கிடைத்த வெற்றிக்கும் விசிக-வின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்ததாக அரசியல் திறனாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். 

தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் 78 சட்டமன்ற தொகுதிகள் ஆட்சியைத் தீர்மானிப்பவையாக உள்ளன. 

2021-லும் இதே பகுதிதான் திமுகவின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியது. இந்தத் தேர்தலில், திமுக கூட்டணி 64 தொகுதிகளில் வெற்றிப் பெற்றது. அதிமுக-பாஜக கூட்டணிக்கு 14 இடங்கள் மட்டுமே கிடைத்தது.இந்த நிலையில், 2026 தேர்தலிலும் இந்தப் பகுதியே  வெற்றி-தோல்வியைத் தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், ஆட்சியில் பங்கு என்கிற முழக்கத்தை, கடந்த ஆண்டு திருமாவளவன் எழுப்பியபோது தமிழக அரசியல் வட்டாரம் அதிர்ந்துதான் போனது. திமுகவுக்கும் அதிர்ச்சிதான் என்றாலும், தொடர்ந்து அவர் அந்த கோரிக்கையை வலியுறுத்தவில்லை. மேலும், 2026 தேர்தலிலும் திமுக கூட்டணியிலேயே விசிக நீடிக்கும் என்றும் திருமாவளவன் அறிவித்துவிட்டார். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *