தமிழகத்தில் இன்று முதல் வரும் 25-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணணாக தமிழகத்தில் இன்று (ஏப்.19) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 21 முதல் 25-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் இன்று முதல் 23-ம் தேதி வரை சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்புள்ளது. தமிழகத்தில் ஏப். 19-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் அணைகெடங்கில் 8 செ.மீ., மாம்பழத்துறையாறில் 7 செ.மீ., கிருஷ்ணகிரியில் 6 செ.மீ., கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் 4 செ.மீ., கோவை மாவட்டம் வால்பாறை, பி.என்.பாளையம், சிவகங்கை, நீலகிரி மாவட்டம் உபாசி, உதகை, தேனி மாவட்டம் சோத்துப்பாறை, பெரியகுளம், தருமபுரி மாவட்டம் பென்னாகரம், கிருஷ்ணகிரி மாவட்டம் கேஆர்பி அணை ஆகிய இடங்களில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.